சென்னையில் இரவில் ரவுடி விரட்டிச் சென்று வெட்டிக் கொலை.. 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
சென்னை: சென்னை திருவொற்றியூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரவுடி சத்யாவை 8 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்துள்ளது. சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 29-வது பிளாக்கை சேர்ந்தவர் சத்யா (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எண்ணூர் காவல் நிலையத்தில் பி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாக சத்யா உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூர் பகுதியில் விஜய் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் நேற்று இரவு திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 8 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் சத்யாவை பின்தொடர்ந்து விரட்டி உள்ளது. அவர்களிடமிருந்து தப்பிக்க சத்யா திருச்சிணாங்குப்பம் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் நுழைந்தார். விடாமல் துரத்திய அந்த மர்ம கும்பல், சத்யாவை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதில் தலையில் பலத்த வெட்டு காயம் அடைந்த சத்யா அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்தக் கொலை குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சத்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications