சம்போ செந்திலுக்கு சுத்து போடும் சென்னை போலீஸ்! பாய்ந்தது புது வழக்கு! ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு?
சென்னை: ரவுடி சம்போ செந்தில் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்போ செந்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் வேறொரு வழக்கில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கிறஞர் அருள், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்திலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரவுடி சம்போ செந்தில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு உள்ளவர். வழக்கறிஞரான செந்தில், ரௌடிகளுக்கு ஆதரவாக ஆஜராகி வாதிட்டு வந்தவர். ஒருகட்டத்தில் அவரே ரவுடியாக ஃபார்ம் ஆகி இருக்கிறார். கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதில் செந்தில் கில்லாடி எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக சம்பவம் செந்தில் என்று அழைக்கப்பட்டு வந்தவர், பேச்சுவழக்கில் சம்போ செந்தில் என்று ரவுடிகள் மத்தியில் அழைக்கப்படுகிறாராம்.
சம்போ செந்தில் ஏற்கனவே திருப்போரூர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திரகுமார் கொலை, முத்தியால்பேட்டையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியான விஜயகுமார் வெட்டிக் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகளில் தொடர்புடையர். மேலும் இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளாக பிரபல ரவுடி சம்போ செந்தில் கைதாகாமல் உள்ளார். சம்போ செந்திலின் சமீபத்திய புகைப்படம் கூட போலீஸிடம் இல்லை எனக் கூறப்படுகிறது. தலைமறைவாக இருந்து கொண்டு தமிழகத்தில் கொலை திட்டங்களை தீட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படியே, ஸ்கெட்ச் போடுவதில் கில்லாடியான சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சென்னையில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் ஸ்கிராப் தொழிலில் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த தொழிலை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டியில் ஆம்ஸ்ட்ராங், சம்போ செந்தில் திட்டத்தின்படி கொலை செய்யப்பட்டதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது. தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை திருவொற்றியூரில் ஒப்பந்ததாரர் கார்த்திக்கை மிரட்டி மாமூல் கேட்ட புகாரில் சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரபல ரவுடி சம்போ செந்தில், அவரது கூட்டாளிகள் சரவணன், கிருஷ்ணன் உள்பட 13 பேர் மீது புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications