அதிரடி! ரூ.3986 கோடி வங்கி கடன் மோசடி.. சென்னை சுரானா குழுமத்தின் ரூ.124 கோடி சொத்துகள் முடக்கம்
சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சுரானா இன்டஸ்ட்ரீயல் நிறுவனம் மற்றும் சுரானா பவர் உள்ளிட்டவை 2 வங்கிகளில் ரூ.3,986 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை மீண்டும் அதிரடியாக ரூ.124 கோடி சொத்துகளை முடக்கம் செய்துள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு சுரானா குழுமத்தின் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் தான் சுரான் இன்டஸ்ட்ரீயல் மற்றும் சுரானா பவர் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்றிருந்தன.

அதாவது இந்த நிறுவனங்கள் ஐடிபிஐ மற்றும் எஸ்பிஐ வங்கிகளில் இருந்து மொத்தம் ரூ.3,986 கோடி கடன் பெற்று இருந்தது. அதன்பிறகு அந்த கடனை திரும்ப செலுத்தவில்லை. இதுபற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையின்போது சுரானா குழும நிறுவனங்கள் சார்பில் ஐடிபிஐ வங்கியில் இருந்து ரூ.2,795 கோடியும், எஸ்பிஐ வங்கியில் இருந்து 1,2000 கோடியும் கடனாக பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதோடு சட்டவிரோத பணப்பரிமாற்றமும் நடந்தது சிபிஐ விசாரணையில் புலனானது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது நிறுவனத்தில் இயக்குனர்களான தினேஷ் சுரானா, விஜயராஜ் சுரானா உள்பட நிர்வாகிகளான ஆனந்த், பிரபாகர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 400 கிலோ தங்கக் கட்டிகள், முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதன்பிறகு அந்த நிறுவனங்களின் சொத்துகளை முடக்கும் பணியை அமலாக்கத்துறை தொடங்கியது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையில் 67 காற்றாலைகள், ரொக்கப்பணம், நகைகள் என ரூ.124 கோடி மதிப்பிலானா அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக முடக்கினர்.
மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் அமலாக்கத்துறை சுரானா குழுமத்தின் சொத்துகளை முடக்கம் செய்துள்ளது. அதன்படி தற்போது அந்த குழுமத்தின் 78 அசையா மற்றும் 16 அசையும் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.124 கோடியாகும்.
ஏற்கனவே ரூ.124 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அமலாக்கத்துறை சார்பில் சுரானா குழும நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.248 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications