300 கோடிப்பே..டிபிஐ 2வது மாடியில் புரண்ட கரன்சி! பரபரப்பை கிளப்பிய புகார்! அன்பில் மகேஷுக்கு சிக்கல்
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அரசியல் மற்றும் கல்வித்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் பள்ளிகளிடமிருந்து ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார்," கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை.

அதிகாரப்பூர்வ விதிமுறைகளை பின்பற்றிய பள்ளிகளுக்கு கூட எளிதில் அங்கீகாரம் கிடைக்காத சூழல் நிலவியதாகவும், பணம் செலுத்திய பள்ளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது.
பள்ளிகளுக்கு அங்கீகாரம்
மேலும், பணம் கொடுக்காமல் எந்த பள்ளிக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஒரு பள்ளிக்கு சராசரியாக 35 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும், மாநிலம் முழுவதும் பல நூறு பள்ளிகளிடமிருந்து பெறப்பட்ட இந்த தொகை மொத்தத்தில் 300 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கலாம்" என்றும் அவர் கூறினார்.
நந்தகுமார்
இந்த பணம் சென்னை தி.நகரில் செயல்பட்ட ஒரு தனியார் நிறுவனம் மூலமாக பெறப்பட்டதாகவும், அதற்கான விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் நந்தகுமார் தெரிவித்தார். மேலும், பள்ளிக்கல்வித் துறையின் அப்போதைய நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்த சிலர் மூலமாகவே அங்கீகார நடைமுறைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அன்பில் மகேஷ்
முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட முத்துகுமார் என்பவர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவராக இருந்த காலத்தில் அங்கீகார நடைமுறைகளில் ஆதிக்கம் செலுத்தியதாகவும், அவர் பரிந்துரைத்த பின்னரே மாவட்ட கல்வி அலுவலர்கள் பலர் அங்கீகாரம் வழங்கியதாகவும் நந்தகுமார் தெரிவித்தார். மாநிலத்தின் 38 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் இந்த செயல்முறையில் தொகை கைமாறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பணப் பரிவர்த்தனை
இதுமட்டுமின்றி, கடந்த ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரக அலுவலக வளாகத்திலேயே பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், அலுவலகத்தின் முதல் மாடியில் துறைசார் பணிகள் நடைபெற்ற நிலையில், இரண்டாவது மாடியில் அங்கீகாரம் பெறுவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாய வசூல்
அங்கீகார விவகாரம் மட்டுமல்லாமல், கல்வித் துறையுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளின் பெயரிலும் தனியார் பள்ளிகளிடமிருந்து கட்டாய வசூல் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக "பெற்றோரை கொண்டாடுவோம்" என்ற பெயரில் நடத்தப்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டிற்காக, ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார் நந்தகுமார்.
தனியார் பள்ளிகள்
அதேபோல், அரசியல் நிகழ்ச்சிகளுக்காக தனியார் பள்ளிகளின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், திமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பள்ளி பேருந்திகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்கான எரிபொருள் செலவுகளையும் பள்ளி நிர்வாகங்களே ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு சில அதிகாரிகளும் துணைநின்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு அங்கீகார நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டதாகவும், எந்தவித கூடுதல் கட்டணமோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற செலவுகளோ இன்றி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதனால் கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழக கல்வித்துறை
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திமுக தரப்பிலோ அல்லது சம்பந்தப்பட்ட முன்னாள் அதிகாரிகள் தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. தனியார் பள்ளிகள் சங்கம் முன்வைத்துள்ள ரூ.300 கோடி லஞ்ச குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது தமிழக கல்வித்துறை வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக மாறக்கூடும் என்பதால், இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications