கரூர் சம்பவம்: வழக்கு போட்டிருந்தால் விஜய் அரசியலை விட்டே ஓடியிருப்பார்.. விட்டுட்டோம்! ஆர்எஸ் பாரதி
சென்னை: கரூர் விஷயத்தில் ஒரே ஒரு வழக்கு போட்டு இருந்தோம் என்றால் விஜய் அவர்கள் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார்.. ஆனால் எங்களுக்கு மக்கள் நலனே பெரிதாக இருந்ததன் காரணத்தால் எங்க தலைவர் தளபதி ஸ்டாலின் அதை பெரிதுபடுத்தாமல், லேசாக விட்டுவிட்டுவிட்டார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். மேலும், திமுக வரலாறு தெரியாமல் ஆடக் கூடாது.. சட்டசபையில் நீங்க ஆடிய டேன்ஸ் எல்லாம் இங்க ஆட முடியாது.." என்றும் கூறினார்.
தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் திமுகவை விமர்சிக்கும் விதமாக பேசினார். குட்டிக் கதை சொல்லி, அப்பாவை காணோம் என மு.க ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றது குறித்தும், 5 நிமிஷம் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது என விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு திமுகவினர் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இன்ஸ்டாகிராம் மூலமாக ஆட்சிக்கு வந்தார்
தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாள் முதல் விஜய் அவர்கள் மக்களுக்கு பணியாற்றுவதையும், கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்றாமல், அக்கறை காட்டாமல் உள்ளார். இந்த ஆட்சியினுடைய குறைபாடுகள்.. இந்த 40 நாட்களில் நடைபெற்று இருக்கிற பல்வேறு கோர சம்பவங்கள்.. பாலியல் குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் இத்தனையும் இந்த 40 நாட்களில் அரங்கேறியது. இதுவரை தமிழ்நாடு பார்க்காத இப்படியொரு ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கு எல்லாம் பொறுப்பேற்று பதில் சொல்வதற்கு பதிலாக, திமுகவை சேர்ந்த இளைஞர்களையும், ஜென்சியை சேர்ந்த இளைஞர்களையும் கைது செய்கிறார்கள். இந்த ஆட்சி எப்படி வந்தது.. இன்ஸ்டாகிராம், சோஷியல் மீடியாக்கள் மூலமாக தான் இவர் ஆட்சிக்கு வந்தார் என்பதை மறந்துவிட்டார்.. இவர்களை நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது கண்டுக்காமல் விட்டுவிட்டோம்.. அதனால் தான் அவர் ஆட்சிக்கு வந்தார்.
ஒரு வழக்கு போட்டு இருந்தால்..
கரூர் விஷயத்தில் ஒரே ஒரு வழக்கு போட்டு இருந்தோம் என்றால் விஜய் அவர்கள் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார்.. ஆனால் எங்களுக்கு மக்கள் நலனே பெரிதாக இருந்ததன் காரணத்தால் எங்க தலைவர் தளபதி ஸ்டாலின் அதை பெரிதுபடுத்தாமல், லேசாக விட்டுவிட்டுவிட்டார். இதன் விளைவாக அந்த விஷயத்தை வைத்து தவறான பிரசாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சிக்கு வந்துவிட்டார். இப்படி ஆட்சிக்கு வந்துவிட்டு இன்றைக்கு ஆட்டம் போடுகிறார்.
அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால் திமுகவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேரை தவெகவை சேர்ந்தவர்கள் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். சைதாப்பேட்டையை சேர்ந்த தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசில் புகார் கொடுத்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
திமுக வரலாறு தெரியாமல் ஆடக் கூடாது
நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. விஜய் சர்க்காருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.. 75 ஆண்டுகளில் பல அடக்குமுறைகளை பார்த்த கட்சி.. மிசாவையே பார்த்த கட்சி.. பல ஆண்டுகாலம் தராகத்தில் இருந்த கட்சி. மொழிக்காக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், சட்டத்தை எதிர்த்து எரித்துவிட்டு 4 ஆண்டு காலம் தண்டனை பெற்ற கட்சி.. மதுரையில் சட்டத்தை எரித்ததற்காக மதுரை முத்து உள்ளிட்ட பலர் ஒரு வருஷத்திற்கு மேல் சிறையில் இருந்து இருக்கிறார்கள்..
விலைவாசி போராட்டத்தில் பல மாதங்கள் சிறையில் இருந்திருக்கோம்.. மிசாவில் எங்க தலைவர் ஸ்டாலின் ஒரு ஆண்டு காலம் சிறையில் இருந்தார். பல சோதனைகளை, துன்புறுத்தல்களை கடந்து அவர் இருந்திருக்கிறார். ஆக.. இதுபோல் பூச்சாண்டி காட்டுகிற வேலைகளை எல்லாம், இனியும் விஜய் வைத்துக் கொள்வாரே ஆனால்.. "ஹி வில் பே தி சேம் பெயின்" திமுக வரலாறு தெரியாமல் ஆடக் கூடாது.. சட்டசபையில் நீங்க ஆடிய டேன்ஸ் எல்லாம் நீங்க இங்க ஆட முடியாது.. இவ்வாறு அவர் பேசினார்.















Click it and Unblock the Notifications