பார்முலா 2 ரெடி.. நிலவேம்பு கசாயம் கொரோனாவை தடுக்குமா? உண்மை என்ன? - ஷாக் பின்னணி!
கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயம் மூலம் குணப்படுத்தலாம் என்ற செய்தி இணையம் முழுக்க பரவி வருகிறது.
சென்னை: கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயம் மூலம் குணப்படுத்தலாம் என்ற செய்தி இணையம் முழுக்க பரவி வருகிறது.
கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் கடுமையாக முயற்சி எடுத்து வருகிறது. முக்கியமாக அமெரிக்கா கொரோனா வைரசுக்கு எதிரான முதல் கட்ட மருந்தை ஏற்கனவே சோதனை செய்துவிட்டது.
இதற்கான முடிவுக்காக அந்நாடு காத்துக் கொண்டு இருக்கிறது. ஜெர்மனியில் உள்ள க்யூர்வேக் நிறுவனம் இந்த வைரஸை குணப்பட்ட ஒரு மருந்தை சோதனை செய்து வருகிறது. சீனாவும் இதற்காக தீவிரமாக முயன்று வருகிறது.

ஆனால் என்ன
ஆனால் உலக நாடுகள் எல்லாம் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக ஆராய்ச்சி செய்தும் அதற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது வரை கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முழுக்க முழுக்க இதற்கு எதிராக மருந்து பயன்பாட்டிற்கு வர ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.

எப்படி இதெல்லாம்
தமிழகத்தில் கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயம் மூலம் குணப்படுத்தலாம் என்ற செய்தி இணையம் முழுக்க பரவி வருகிறது. நிலவேம்பு கசாயம் குடித்தால் கொரோனா வராது, நிலவேம்பு கசாயம் குடித்தால் வந்த கொரோனா போகும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் என்று சமூக வலைத்தளங்களில் இந்த வதந்தி பரவி வருகிறது.

என்ன இல்லை
அதேபோல் கொரோனா வைரஸை முறியடிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவேம்பு கசாயம் - ஃபார்முலா 2-வை உருவாக்கியுள்ளோம். இது கொரோனவை கட்டுப்படுத்தும் , இதில் புதிய மூலிகைகளை சேர்த்து இருக்கிறோம், அது கொரோனவை குணப்படுத்தும். என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார். இது போல் இணையம் முழுக்க நிலவேம்பு கசாயத்திற்கு இலவசமாக பலர் மார்க்கெட் செய்து வருகிறார்கள்.

உண்மை என்ன
நிலவேம்பு கசாயம் தமிழ் மருத்துவம் கொடுத்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும். சக்தி வாய்ந்த மூலிகை மருந்துகளில் அதுவும் ஒன்று. முதலாவதாக நிலவேம்பு கசாயம் என்பது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஒரு மூலிகை கசாயம். ஆனால் இதன் மூலம் கொரோனாவை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. இதை இன்னும் அறிவியல் ரீதியாக யாரும் நிரூபிக்கவில்லை. அடுத்து, நிலவேம்பு கசாயம் என்பது கொரோனாவை மட்டுமல்ல டெங்குவை குணப்படுத்தாது, அதை கட்டுப்படுத்த மட்டுமே செய்யும். நிலவேம்பு உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அவ்வளவுதான்!

குணம் செய்யாது
நிலவேம்பு நல்ல மருந்தாக இருந்தாலும், அதி கொரோனாவை குணப்படுத்தும் என்பதை நம்ப கூடாது. இது தொடர்பாக வரும் வாட்ஸ் ஆப் வதந்திகளை எதையும் மக்கள் நம்ப கூடாது. உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிரான ஆராய்ச்சி இப்போதுதான் நடந்து வருகிறது. இந்த வைரஸ் எப்படிப்பட்டது என்பது கூட இன்னும் உலக சுகாதார மையத்திற்கு முழுதாக தெரியவில்லை. வைரஸின் உண்மையான குணாதிசயம் என்ன என்பதே இன்னும் முழுதாக தெரியவில்லை.

நம்ப வேண்டாம்
அதற்கு முன்பே நிலவேம்பு கசாயம் கொரோனாவை குணப்படுத்தும் என்று செய்திகள் வருவதை மக்கள் நம்ப வேண்டாம். நிலவேம்பு கசாயமோ அல்லது வேறு விதமான எந்த கஷாயமோ இந்த வைரஸை கட்டப்படுத்தாது. ஒரு வைரஸ் பரவும் நேரத்தில் அது தொடர்பான அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத செய்திகளை பரப்புவது சர்வதேச குற்றம் என்று உலக சுகாதார மையம் வரையறுக்கிறது. அதனால் சர்வதேச அளவில் குற்றம் செய்யாமல், வதந்திகளை பரப்பாமல் இருப்பதே சிறப்பானது!












Click it and Unblock the Notifications