சொன்ன பேச்சை கேட்டிருந்தால் உயிரோடு இருந்திருக்கலாம்! ஜெயலலிதா குறித்து எஸ்.பி.வேலுமணி பேச்சு
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு போய் சிகிச்சை பெற்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். தன் உயிரை பற்றிக் கூட கவலைப்படாமல் எங்களை எல்லாம் எம்எல்ஏக்களாக்கினார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழா பொதுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "அதிமுக ஆட்சியில் காவல் துறையை மரியாதையாக நடத்தினோம். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் காவல் துறையால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருக்கிறது.
இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் காவல் துறை யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அதிமுகவினர் எங்குச் சென்றாலும் அவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். இப்படி திமுக ஆட்சியில் கணக்கில்லாமல் வழக்கு போடுகிறார்கள்.
அதனால் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. காவல் துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், முதலாளிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சிக்கு வரும். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, அடுத்து நடந்த 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று எங்களை எல்லாம் எம்எல்ஏவாக்கினார். அவரது உடல்நிலை குன்றியிருந்த போது அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்திருக்கலாம்.
அப்படி சிகிச்சை எடுத்திருந்தால் இன்னும் பல காலம் அவர் உயிரோடு இருந்திருப்பார். இந்த கட்சியும் ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் அவர் அமெரிக்காவுக்கு செல்லவில்லை. என தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில் இந்த கட்சியும் ஆட்சியும் 100 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும் என சட்டசபையில் ஜெயலலிதா பேசினார்.
திமுகவுக்கு யாரும் விரும்பி வாக்களிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு கோவை அதிமுக 10 தொகுதிகளிலும் வென்றது. திமுகவால் கோவையில் ஒரு அமைச்சரை கூட நியமிக்க முடியவில்லை. இன்று அதிமுகவுக்கு 75 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே அதிமுகவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இன்று எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கப்படுகிறது. பள்ளிக் கூடம் வரைக்கும் வந்துவிட்டார்கள். இப்படியே போனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். தயவு செய்து தடுத்து நிறுத்துங்கள் என எஸ்.பி. வேலுமணி கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications