'நம்ம பாக்கெட்டுல பணம் பொங்கி வழிஞ்சா'.. சரத்குமாரை வம்பிழுத்த எஸ்வி சேகர்
சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாரை வம்பிழுக்கும் விதமாக நடிகர் எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று ராமநாதபுரத்தில் தனது கட்சிப் பிரமுகர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரஜினிகாந்த் கருத்துகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பபில்லை. ரஜினிகாந்த் பற்றி பேசினால் தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்களின் டிஆர்பி எகிறும் என்பதாலேயே இதைப்பற்றி கேட்டுகிறாங்க. எனவே ரஜினிகாந்த் பற்றி பேச வேண்டுமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்துங்கள். அதன்பிறகு ரஜினிகாந்த் பற்றிய கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல்வேறு இன்னல்களைக் கடந்து அதிமுக இயக்கத்தையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி திறம்பட ஆட்சி புரிந்து வருகிறார். எனவே தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.
இந்நிலையில் தமிழகத்தில் வெற்றிடம் என்பதற்கு வாய்ப்பே இல்லை, தமிழகம் சிறப்பாக வழி நடத்தப்படுகிறது என்று சரத்குமார் கூறியது தொடர்பாக பிரபல தமிழ் செய்தி ஊடகத்தின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதை ரீடுவிட் செய்த நடிகர் எஸ்வி சேகர், அதற்கு மேல் கேப்சனாக "நம்ம பாக்கெட்டுல பணம் பொங்கி வழிஞ்சா ஊர்ல எல்லார்கிட்டயும் பணம் பொங்கி வழியுதுன்னு மனசு நினைக்கும்" என்று வம்பிழுத்துள்ளார். நடிகர் சரத்குமார் அண்மைக்காலமாக அதிமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் எஸ்வி சேகர் அவரை டுவிட்டர் பதிவின் மூலம் விமர்சித்துள்ளார்.