முதல்வர் கனவில் மகன் விஜய்? காட்டுக்குள் அப்பா எஸ்.ஏ.சி? கசந்துபோனதா குடும்ப உறவு?
சென்னை: 2026இல் முதல்வராகும் கனவுடன் சென்னையில் விஜய் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும்போது அவரது அப்பா கொடைக்கானலில் ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துக் கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியப் போகிறது. இந்த மாதம் பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வரும் 2024இல் தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும் அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதனை அடுத்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் உட்கட்டமைப்பு பற்றி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயல் அலுவலகத்தில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
அந்தக் கூட்டம் முடிந்த பிறகு கட்சியில் 2 கோடி பேரை உறுப்பினர்களாக இணைப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன. அது தொடர்பான அறிக்கையையும் கட்சித் தலைவரான விஜய் வெளியிட்டிருந்தார்.

மேலும் கட்சிக்கு என்று ஆப், ஐடி விங்க் எனப் பல பணிகள் வேகம் எடுத்து வருகின்றன. கட்சிக்கு என்று அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் கட்சியைக் குறித்தும், விஜய்யை முதல்வராகப் பதவியில் அமர்த்துவது குறித்தும் ஊடகங்களில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனப் பல வருடங்கள் முன்பே அடிபோட்டவர் இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
கட்சியின் பெயரை அறிவிப்பது தொடர்பாக விஜய் வெளியிட்டிருந்த முதல் அறிக்கையில், 'என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்குப் பெயர்,புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்டகால எண்ணம் மற்றும் விருப்பமாகும்' என்று உணர்ச்சி பொங்கப் பேசி இருந்தார்.

அதில் வியப்பு என்னவென்றால், தனது பெயருக்கும் புகழுக்கும் முதல் காரணம் என்று தாயையும் தந்தையும் அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தார். அப்படி பெயருக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த தாயும் தந்தையையும் அவர் சந்தித்து கட்சி தொடங்கியது தொடர்பாகச் செய்தியைச் சொல்லி ஆசீர்வாதம் கூட வாங்கவில்லை என்பதுதான் சோகமான செய்தி.
இவரது தந்தைதான் எல்லாமும் என்று ஆரம்பக் காலங்களில் விஜய் பேசி வந்தார். அப்பாவின் கண்டிப்பு எப்படிப்பட்டது? தன்னை உருவக்கேலி செய்த காலங்களில் தன்னை தூக்கிச் சுமந்து படங்களை இயக்கி தனது தந்தை எப்படி வெளியிட்டு உதவினார் என்பதை எல்லாம் அவரே சொல்லி இருக்கிறார். அதற்கான காணொளிகள் கூட இன்றும் இணைய உலகில் உலா வருகின்றன.
அப்படிப்பட்ட அப்பா இதுவரை விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து ஒன்றும் கருத்துச் சொல்லவில்லை. அவ்வளவு ஏன் அவர் சீனுக்கே வரவே இல்லை.

விஜய் ரசிகர் மன்றமாக இருந்ததை விஜய் மக்கள் இயக்கமாக 2009 ஜூலையில் மாறியதே அவரது அப்பாதான். அவர்தான் விஜய்யின் முதல் ரசிகர். ரசிகர் மன்றத்தின் முதல் உறுப்பினர். 1993 இல் ஜனவரி மகனுக்காக மன்றத்தை உருவாக்கினார் எஸ்.ஏ.சி. ஆனால், அவர் இப்போது வெளியில் நிறுத்தப் பட்டுள்ளார்.
அப்பாவுடன் சேர்ந்துதான் 2011 தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் விஜய். அந்தத் தேர்தலில் அதிமுக 50 தொகுதிகளில் ஆதரவு தரவேண்டிய வேட்பாளர் பட்டியலை விஜய்யிடம் அளித்தது. அதை ஏற்று விஜய் ரசிகர்களும் அதிமுகவுக்கு வேலை செய்தனர்.
இப்படி மகனின் சினிமா கனவுடன் சேர்த்து அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே கட்டி எழுப்பியவர் இன்று தமிழக வெற்றிக் கழகத்திற்குள் இல்லாமல் வெளியில் இருக்கிறார்.

அந்தக் கவலை எல்லாம் எஸ்.ஏ.சிக்கு உள்ளதா எனத் தெரியவில்லை. மகன் கட்சி ஆரம்பித்து 2 கோடி பேரை உறுப்பினராகச் சேர்க்கும் பட்டியலில் முதல் ரசிகர் மன்றத்தை உருவாக்கிய தன்னை சேர்க்கவில்லை என்ற வேதனை அவருக்குள் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
அவர் I WANT JUSTICE படப்பிடிப்பில் மிக ஜாலியாக, ஒரு இளைஞனைப் போலச் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மாதம் 19 ஆம் தேதி தனது பனையூர் வீட்டில் நிர்வாகிகளுடன் விஜய் கூடி ஆலோசனை செய்து கொண்டிருந்த அதே நாளில் கொடைக்கானல் குளிரில் ஐ வான்ட் ஜஸ்டீஸ் படக்குழுவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் உற்சாகமாக உலா வந்து கொண்டிருந்தார்.
அதற்கு முதல்நாள்தான், அதாவது 18 ஆம் தேதிதான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்தது. அதற்கான காணொளியை இயக்குநர் ரமேஷ் ரங்கசாமி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரமேஷ் ரங்கசாமி வெளியிட்டு வரும் பதிவுகளில், எஸ்.ஏ.சியை தனது குருவாக அவர் எப்படி மனதிற்குள் வைத்துக் கொண்டாடி வருகிறார் என்பது வெளிப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.சியுடன் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதே தனது வாழ்நாளில் மிகப்பெரிய வரம் என்று அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அழகான பனி மூட்டத்திற்கு இடையே ஒவ்வொரு காட்சியும் எப்படி எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை அவரது ஃபேஸ்புக்கில் நொடிக்கு நொடி வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார் இயக்குநர்.

சென்னையில் மகன் ஆட்சியைப் பிடிப்பதற்காக அயராது திட்டம் போட்டுவருகிறார். அது எதுவுமே தெரியாத மாதிரி தந்தை கொடைக்கானலில் காட்சிகளைப் பிடிப்பதற்கு கடும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த்தை சினிமாவில் உச்சத்திற்கு உயர்த்தியவர் எஸ்.ஏ.சி. அவர் அரசியலுக்கு வந்தபோது அவரது நிழலில் அவர் நிற்கவில்லை. அதைப்போல் இன்று உச்ச நடிகராக உயரத்தில் விஜய் உட்காருவதற்கு உயிரைத் தவிர மற்ற அனைத்தையும் தந்தவர் எஸ்.ஏ.சி. விஜய்யின் கட்சியின் நிழல்கூட இப்போது எஸ்.ஏ.சி. மீது படவே இல்லை.
தள்ளியே நின்று வேடிக்கை பார்க்கிறார் இந்த டைரக்டர்!
















Click it and Unblock the Notifications