"கச்சேரி இருக்கு".. கியரை மாற்றிய ஸ்டாலின்.. களமிறங்கிய மாப்பிள்ளை.. கிலியில் புள்ளிகள்.. என்னாச்சு?
கொங்குவை பலப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அடுத்தக்கட்ட அதிரடியில் இறங்கி உள்ளார்
சென்னை: கொங்கு மண்டலத்தில் என்ட்ரி தந்திருக்கிறதாம் சபரீசன் டீம்.. இதுதான் ஏன் என்று தெரியாமல் திமுக நிர்வாகிகள் கதிகலங்கி போயுள்ளனராம்.
இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எளிதில் வெற்றி என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடி வெற்றி பெற்றது திமுக.. இது தொடர்பான வருத்தம் ஸ்டாலினுக்கு இன்னமும் உள்ளது.. கூடுதலாக, 20 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே அவரது கணக்கு.
குறிப்பாக, கொங்கு மண்டலம்.. கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.. இத்தனைக்கும் இதே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த தேர்தலில் திமுக நல்ல வாக்கு வங்கியை வைத்திருந்தது.

உள்ளடி வேலை
திமுக எளிதாக வெற்றி பெறக்கூடிய இடங்களிலும் அதிமுக வெற்றிபெற்றது.. இதற்கு உள்ளடி வேலைகள் மற்றும் களப்பணிகளை மூத்த நிர்வாகிகள் யாரும் சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பின.. திமுக எங்கெல்லாம் தோல்வி அடைந்ததோ, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஸ்டாலின் ரிப்போர்ட் கேட்டிருந்தார்.

மாவட்டம்
அந்த ரிப்போர்ட்டும் அனுப்பப்பட்டிருந்தது.. அதன்படி, மதுரை, சேலம், ஈரோடு, நாமக்கல், நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் பணி சறுக்கலாகிவிட்டது என்ற விஷயமும், இந்த மாவட்டங்களில் எல்லாம் அதிமுக எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டிருந்தது என்ற தகவலும் ஸ்டாலினுக்கு வந்து சேர்ந்தது.

கூட்டம்
இதையடுத்து, 2 விதமான முடிவுகளை ஸ்டாலின் யோசித்திருந்தார்.. ஒன்று, களையெடுப்பு.. மற்றொன்று கொங்குவில் திமுகவை பலப்படுத்துவது.. சமீபத்தில் முதல்வர் ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருந்தார்.. அதில் எப்படியும் களையெடுப்புக்கான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், ஸ்டாலினோ, குற்றச்சாட்டுக்கு ஆளான எந்த மா.செ.க்களையுமே கடிந்துகொள்ளவில்லை.. அவர்கள் பெயரைகூட கூப்பிட்டு திட்டவில்லை..

உள்ளாட்சி தேர்தல்
மாறாக, "அனைவரும் தங்கள் மீதுள்ள குறைகளை களைந்து, உள்ளாட்சி தேர்தலுக்கு இறங்கி வேலையை பாருங்க" என்று மட்டுமே அன்புடன் கேட்டுக் கொண்டார்... இதற்கு அடுத்தபடியாக, உதயநிதியை கொங்குவை பலப்படுத்தும் முயற்சியில் களமிறக்கலாமா என்ற யோசனையும் ஸ்டாலினுக்கு இருந்ததாக சொல்கிறார்கள்.. உதயநிதிக்கும் இதில் விருப்பம் இருந்ததால், அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அதுவும் முடிவாகவில்லை..

சீனியர்கள்
இப்படிபட்ட சூழலில்தான், செந்தில்பாலாஜியை கொங்குவில் களமிறக்கப்பட்டார். அவரும் முடிந்த அளவு கொங்குவை வளைத்து, மாஜிக்கள், அதிருப்தியாளர்கள், சீனியர்கள், மாற்று கட்சியினர் என தன்னால் இயன்ற அளவுக்கு திமுகவுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார். அதில் முக்கியமானவர்கள் அமமுக பழனியப்பன், அதிமுக தோப்பு வெங்கடாசலம், நாமக்கல் முன்னாள் எம்.பி., சுந்தரம், சேலம் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம் போன்றோர் ஆவார்..

விசாரணை
இதைதவிர, திமுக - அமமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலர்களை தொடர்பு கொண்டு, திமுகவில் இணைக்கும் முயற்சியில் செந்தில்பாலாஜி தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்னொரு முக்கியமான தகவல் கசிந்து வருகிறது.. திமுகவின் தோல்வி குறித்து உண்மை நிலவரத்தை அறிய, ஒரு தனியார் நிறுவனம் மற்றும் திமுகவை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் விசாரித்து வருகின்றனராம்.. இவர்கள் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஏற்பாட்டில் இந்த ஆய்வில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுகள்
அதன்படி, திமுகவில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள், தோல்விக்கு காரணம், குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்து, ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலர்கள் வரை, கடந்த வாரங்களில் விசாரித்து முடித்துள்ளனர்.. அந்த ரிப்போர்ட்டும் சபரீசனிடம் தரப்படுகிறது. இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் களையெடுப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்..

ஆய்வு
யாரெல்லாம் உள்ளடி வேலைகளை பார்த்தார்களோ, அவர்களை கழட்டிவிடவும் திமுக தயங்காது என்கிறார்கள்.. அப்படி கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக திமுக நம்பி மாற்று கட்சியில் இருந்து வந்த அதிமுக, அமமுக நிர்வாகிகளுக்கு அந்த பதவிகளை வழங்கவும் திமுக தலைமை யோசித்து வருகிறாம்.. இதனால் கொங்கு மண்டல திமுக கதிகலங்கி போயுள்ளது...

ரிப்போர்ட்
அதேசமயம், ஸ்டாலினின் வாய்மொழி உத்தரவாலேயே இந்த அதிரடியை சபரீசன் எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.. என்னதான், கொங்குவில் இருந்து நெகட்டிவ் ரிப்போர்ட்கள் வந்திருந்தாலும், அதை நம்பி யார் மீதும் ஸ்டாலின் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.. அவர்கனைள களையெடுப்பும் செய்யவில்லை.. மாறாக, ஒருமுறைக்கு 3 முறையாக ஆய்வு செய்து, அதன்பிறகே நடவடிக்கை எடுக்கும் ஸ்டாலினின் போக்கை, முதிர்ச்சியான அரசியல் பக்குவம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications