தமிழகத்தில் சென்னை தவிர நகர்ப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு
சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர நகர்ப்புறங்களில் சலூன் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியதை அடுத்து இன்று காலை 7 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் எந்த கடைகளும் 50 நாட்களுக்கு மேலாக திறக்கப்படவில்லை. லாக்டவுன் 4.0 அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் சில கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.

அதில் சலூன் கடைகள் மூலம் சில இடங்களில் கொரோனா பரவியதால் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு.
இதையடுத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கடைகளை திறக்க நகர்ப்புறங்களிலும் அனுமதி அளிக்க வேண்டும் என சலூன் கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்று முதல் சென்னையை தவிர அனைத்து நகர்ப்புறங்களிலும் சலூன் கடைகளையும் அழகு நிலையங்களையும் திறக்க அரசு அனுமதி அளித்தது.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்பட்டன. குளிர்சாதன வசதியை சலூன்களும் அழகு நிலையங்களும் பயன்படுத்தக் கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி அவ்வப்போது தெளிக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவுரைகளைப் பின்பற்றி இன்று கடைகள் திறக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications