நான், எனது என்று இருக்க கூடாது. நாம், நமது என்பதுதான் சனாதனம்: ஆளுநர் ரவி பேச்சு
சென்னை: சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கானது கிடையாது. பாரத நாட்டில் அனைவருக்கும் உள்ளடக்கியது ஆகும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர்.என்.ரவி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பல்கலைக்கழக நிகழ்வுகள், அரசு நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்துகொண்டு பேசி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கள் அவ்வப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளும் திமுக அரசை மறைமுகமாக சீண்டும் வகையில் திராவிடம் குறித்தும் பேசிய பேச்சுக்கள் ஆளும் திமுகவிற்கும் ஆளுநருக்கும் இடையேயான விரிசலை அதிகப்படுத்தும் வகையில் இருந்தது.

இந்த நிலையில், திருவண்ணாமலை சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆர்.என்.ரவி பேசியதாவது:- திருவண்ணாமலை ஆன்மீக பூமியாகும். இந்தியா மற்ற நாடுகளை போல் கிடையாது.
மற்ற நாடுகள் அனைத்து ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தியா அப்படி கிடையாது, பாரத நாடு சாதுக்கள் ரிஷிகளின் தவ வலிமையினால் உருவானது. 1947 ஆம் ஆண்டுதான் பாரத நாடு உருவானது என்று பலரும் நினைக்கிறார்கள். 1947 ஆம் ஆண்டு விடுதலைதான் கிடைத்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளை சுற்றி பார்த்து இருக்கிறேன். பாரத தேசத்தின் ஆன்மீக தலைநகராக தமிழ்நாடு உள்ளது.
இதனால், நான் பெருமிதம் அடைகிறேன். அசைவ உணவு விரும்பி சாப்பிடுபவர்கள் எங்கு வேண்டும் என்றாலும் விரும்பி சாப்பிடுவேன். அதற்கு கிரிவல பாதை உகந்த இடம் கிடையாது. கிரிவல பாதையில் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கு தேவையான என்னால் முடிந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும். சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கானது கிடையாது. பாரத நாட்டில் அனைவருக்கும் உள்ளடக்கியது ஆகும்.
நான், எனது என்று இல்லாமல் நாம் , நமது என்பதுதான் சனாதனம் ஆகும். குறுகிய காலமாக சனாதனம் அழிவுகளை சந்தித்து வருகிறது" என்றார். முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை ரமணாசிரமம் அருகே நேற்று கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள், தமிழகத்தை விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர். ரமணாசிரமத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் முன்பே , கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். ஆசிரமம் உள்ளே ஆளுநர் ஆர்.என்.ரவி நுழையும்போது, காவல்துறையின் கைது நடவடிக்கையையும் மீறி சிலர் கருப்பு கொடி காட்டினர். கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications