சென்னை தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டம்? கலெக்டர் அலுவலகம் அருகே போராட போலீஸ் அனுமதி!
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட அனுமதி இல்லை என்றும், வேறு இடத்தில் போலீஸ் அனுமதி கேட்டு போராடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இந்த நிலையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையில் தூய்மை பணியாளர்கள் மனு கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தக்கூடாது என்றும், அனுமதி பெற்ற வேறு ஒரு இடத்தில் போராட்டம் நடத்திக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மேலும், சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். தமிழக அரசும் தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, நிதி உதவி போன்ற பல்வேறு சலுகைகளை அளித்தது. எனினும், பணி நிரந்தரம் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றவில்லை.
இதனால் தற்காலிகமாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை நிறுத்தியிருந்தனர். மேலும், போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் தூய்மை பணியாளர்கள் மனு கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், மீண்டும் நாளை முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துவார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications