யாரு ஆமை? முதல்ல அவரை ஒரே கட்சியில் இருக்க சொல்லுங்கள்! செல்வப்பெருந்தகைக்கு சரத்குமார் பதில்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை முதலில் ஒரே கட்சியில் இருக்கச் சொல்லுங்கள் என பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் விமர்சித்துள்ளார். பாஜகவை ஆமையுடன் ஒப்பிட்டு அவர் பேசியதற்கு சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நடிகர் சரத்குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் பெரிய அனுகூலம் கிடைத்துள்ளது. இதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். என்னென்ன பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது, வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் அதையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.

அப்போது அவரிடம், செல்வப்பெருந்தகை குறித்து கேட்ட போது, "அவரை முதலில் ஒரே கட்சியில் இருக்க சொல்லுங்கள்" என்றார். தியாகி இமானுவேல் சேகரன் 68ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தியாகி இமானுவேல் தபால் தலை வெளியிட்டது. தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிப்படி மணிமண்டபம் அமைத்துள்ளனர். பாஜகவை போல் பிரித்தாளும் கொள்கை காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. பிரித்தாளும் கொள்கையுடைய பாஜகதான் பாமக, அதிமுக பிரிவினைக்கு காரணம், பாஜகவால்தான் பாமகவில் தந்தை மகன் இடையே முட்டல் உருவாகியுள்ளது.
அதிமுகவில் செங்கோட்டையன் பிரிவினைக்கும் பாஜகதான் காரணம். ஆமை நுழைந்த வீடு போல், பாஜக எனும் ஆமை நுழைந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. பாஜக யார் யாரோடு சேர்கிறார்களோ அங்கெல்லாம் பிரச்சனை.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆட்சியில் இருக்கும் போது மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக வாய் திறக்காமல் தற்போது பேசியுள்ளது வாக்கு அரசியல், சந்தர்ப்பவாத அரசியலாகும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த ஆமை புகுந்தது போல் பாஜக என செல்வப்பெருந்தகை குறிப்பிட்ட கருத்துக்குத்தான் சரத்குமார் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது போல் அதிமுக குறித்தும் செல்வப்பெருந்தகை கடந்த சில நாட்களுக்கு முன்பு விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாஜக எங்கெல்லாம் உறவு வைக்கிறார்களோ, அங்கே எல்லாம் கூறு போடுவது தான் வழக்கம். ஏற்கெனவே அதிமுகவை எடப்பாடி அதிமுக, ஓபிஎஸ் அதிமுக, டிடிவி அதிமுக, சசிகலா அதிமுக என நான்காக பிரித்து வைத்து இருக்கிறார்கள். இப்போது ஐந்தாவது அதிமுகவாக செங்கோட்டையன் தலைமையில் உருவாகலாம்.
எடப்பாடி பழனிசாமி எந்த இடத்திற்குச் செல்கிறாரோ அதற்கேற்ப பேசுகிறார். சட்டசபை தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதில் 2-ஐ எடுத்து விடுங்கள். அதிமுக 10 தொகுதிகளில் வெல்வதே கஷ்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications