தேர்தலில் போட்டியிடாமல் காரணம் சொல்லி எஸ்கேப் ஆன சரத், ராதிகா - சமக தொண்டர்கள் அதிர்ச்சி
சட்டசபைத் தேர்தலில் ராதிகாவும் சரத்குமாரும் போட்டியிடவில்லை என தெரியவந்துள்ளதால் சமக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் 37 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சரத்குமார் இன்று வெளியிட்டார். இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனவும் அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ராதிகாவும் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளதால் சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
அதே நேரத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக தானும் தன்னுடைய மனைவி ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த சரத்குமார் திடீரென விலகி கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதையடுத்து சமத்துவமக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பின்னர் கூட்டணியில் இணைந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்காக சமகவிடம் இருந்து 3 தொகுதிகள் திரும்ப பெறப்பட்டதாகவும் எனவே 37 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று சரத்குமார் தெரிவித்திருந்தார்.

37 வேட்பாளர்கள் பட்டியல்
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட்டு கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள சமக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 37 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

சரத்குமார் பேச்சு
வேட்பாளர்களை வெளியிட்டு பேசிய சரத்குமார் அதிமுக, திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் ஒருசில மட்டும் நிறைவேற்றக்கூடியதாக இருக்கும் எனவும் மக்கள் உழைத்து பொருட்களை பெற்றுக்கொள்வார்கள், இலவச பொருட்களை வழங்கவேண்டிய அவசியமில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடாத சரத், ராதிகா
உழைப்பு, சேவையின் அடிப்படையில் சமத்துவ மக்கள் கட்சியில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றதாக தெரிவித்த சரத்குமார் சமக வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றி வாகை சூட உழைக்க வேண்டியிருப்பதால் நானும் என் மனைவியும் முதன்மை துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்தார்.

சமக தொண்டர்கள் அதிர்ச்சி
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற போது ராதிகா, வேளச்சேரி அல்லது கோவில்பட்டியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. கடவுள் கட்டளையிட்டால் தான் போட்டியிடுவேன் என்று ராதிகாவும் கூறியிருந்தார். இந்த நிலையில் வேட்பாளர்கள் பட்டியலில் சரத்குமார், ராதிகா பெயர் இடம்பெறவில்லை. இருவருமே போட்டியிடவில்லை என்று தெரியவந்துள்ளதால் சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications