“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார்.
சென்னை: "தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும். அவ்வாறு வலியுறுத்துவதில் எந்த தவறும் இல்லை" என பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துள்ளார் சரத்குமார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார், தமிழக அரசு மற்றும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தின் நிதிநிலை மோசமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட சரத்குமார், மாநிலத்தின் கடன் சுமை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு 'வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திமுக அரசுக்கு ஊழல் மட்டுமே தெரியும் என்று சாடிய சரத்குமார், தேர்தல் வாக்குறுதிப்படி மாணவர்களின் கல்வி கடனை ஏன் இன்னும் ரத்து செய்யவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார். மேலும், திமுகவில் வாரிசு அரசியல் ஆதிக்கம் செலுத்துவதைச் சுட்டிக்காட்டிய அவர், தனது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு ஒருவரை முதலமைச்சர் ஆக்க திமுக முன்வருமா என்று சவால் விடுத்தார்.
மேலும் பேசிய சரத்குமார், "மூன்றாவது மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என பாஜக அரசு கூறுகிறது. இந்தியைத் திணிக்கவில்லை. அந்த மூன்றாவது மொழி ஹிந்தி என்று சொல்லவும் இல்லை. கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. பெரும்பாலான திமுக தலைவர்களின் குழந்தைகள் ஹிந்தி படிக்கும்போது, மற்றவர்கள் கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்வது அரசியல் தவிர வேறில்லை. தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும். அவ்வாறு வலியுறுத்துவதில் எந்த தவறும் இல்லை. " எனத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை பற்றிப் பேசிய சரத்குமார், "அரசியல் புரிதல் இல்லாமல் இளைஞர்கள் விஜய்யின் பின் செல்வது வருத்தமளிக்கிறது. விஜய் நல்ல நடிகர் என்பதால் கூட்டமாக அவர்களின் ரசிகர்கள் கூடுகிறார்கள். அவரது கட்சிக்குதான் அவர்கள் வாக்களிப்பார்கள் என உறுதியில்லை. விஜய்க்கு கொள்கையே இல்லை. எந்தவித செயல் திட்டத்தையும் அவர் முன்மொழியவில்லை.
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை எதிர்ப்பது மட்டும் அரசியல் இல்லை. தமிழகத்தின் ரூ. 10 லட்சம் கோடி கடனை எப்படி அடைப்பார் என விஜய் கூறவில்லை. ஆனால், மக்களுக்கு வீடு, இருசக்கர வாகனம் அளிப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். அவருக்கு நிர்வாகம் குறித்த புரிதலின்மையின் வெளிப்பாடுதான் இது.
மக்களையே சந்திக்காதவர் எப்படி தலைவராக இருக்க முடியும்? தனது கட்சியினர் 41 பேர் உயிரிழந்தபோது அவர்களைச் சந்திக்க விஜய் ஏன் போகவில்லை? தனது கட்சிக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர் எப்படி தலைவராக இருக்க முடியும்? நல்லது, கெட்டதைப் பார்க்காமல் சொகுசு கேரவனிலிருந்து கோட்டைக்குச் சென்றுவிடலாம் என்பது எந்த விதமான அரசியல்? அவரது உருவபொம்மையை தூக்கிச் சென்று வாக்கு சேகரிப்பது என்ன கலாச்சாரம்?
அறிவு, ஆற்றல், திறன், மக்கள் மீது உண்மையான பாசம் மிக்கவர்களை வருங்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் கட்சியைத் தொடங்கினார். அதற்கு முன் களத்துக்கே வராமல் மக்களுக்கு நல்லது எதுவும் செய்யாமல் வாக்குகளைக் கேட்பவர் தலைவராக முடியாது. விஜய்க்கு எந்தவித அடிப்படைத் தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை." என விமர்சித்துள்ளார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications