கொடநாடு தெருவுல நின்னீங்களே! மிஸ் ஜெயலலிதான்னு சொல்லியிருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி
சென்னை: தவெக மாநாட்டில் ஒரு நாட்டின் பிரதமரை மிஸ்டர் பி.எம். என்கிறீரே! அன்று கொடநாட்டில் தெருவில் நின்ற போது மிஸ் ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா என கேள்வி எழுப்பி, விஜய்யை, நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் தனது பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், "அண்மையில் கத்துக்குட்டியான ஒருவர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைக்கிறார். மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என அழைப்பதில் தவறில்லை.

நீங்கள் கொடநாட்டிலே தெருவிலே நின்று கொண்டிருக்கும் போது மிஸ் ஜெயலலிதா ஜெயராமன் என சொல்லி இருப்பீங்களா? சொல்லித்தான் பாருங்களேன். தன்மையற்று பேசியதால் அவரை பற்றி நான் பேசுகிறேன்.
தாய்மாமன்
நம் முதல்வரை தாய்மாமன் என அழைக்கிறார். அங்கிள் என அழைக்கிறார். அழைப்பதில் தவறில்லை. ஆனால் தரம் என ஒன்று இருக்கிறது. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள்... நீங்கள் அந்த மனிதருக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ இல்லையோ அந்த பதவிக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். அந்த தரத்தை கற்றுக் கொள்ளுங்கள் விஜய் அவர்களே...
தர்மம்
நான் பலரை சந்தித்து வந்தவன்தான். எதை பேசினாலும் நியாயம், தர்மம், உண்மை இருக்க வேண்டும். நீட் வேண்டாம் என சொல்கிறீர்கள். நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் பயனடைகிறார்கள் தெரியுமா? நீட்டை கொண்டு வந்தது யார்? திமுகதான் கொண்டு வந்தது என உங்களுக்கு தெரியாதா?
தகுதி இருக்கா
தகுதி இருப்பவர்கள்தான் பதவிக்கு வர வேண்டும். நண்பர் விஜய்க்கு பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாது என்பது எனக்கு நன்றாக தெரியும். இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி செயல்படுகிறார் என விஜய் சொல்கிறார். அப்படியென்றால் காஷ்மீரில் 25 தொகுதிகளில் பாஜக ஜெயித்ததே எப்படி?
12 ஆண்டு கால மோடி ஆட்சி
பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் எங்காவது ஒரு மசூதியை இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்களா? சுப்ரீம் கோர்ட் ஆர்டர் கொடுத்தாங்க. ராமர் கோயிலும் கட்டப்பட்டது, மசூதியும் கட்டப்பட்டது. நாங்கள் எல்லாருமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.
மதவாத உணர்வு
நீங்கள்தான் (விஜய்) மதவாத உணர்வை தூண்டுகிறீர்கள். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது. இஸ்லாமியர்கள் மோடியின் சிறந்த ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
832 மீனவர்களா
தேவையற்ற அந்த காட்சியை மாற்ற முற்படாதீர்கள். 832 மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என விஜய் சொல்கிறார். இந்த 12 ஆண்டு கால மோடி ஆட்சியில் ஒரு மீனவர் கூட மரணமடையவில்லை. உங்களிடம் தரவு இருக்கிறதா விஜய்? ஒரு உன்னத தலைவரை இழிவுப்படுத்தாதீர்கள். கச்சத்தீவை மீட்டு தாருங்கள் என்கிறார், அதை தாரை வார்த்தது யார் தெரியுமா?
கச்சத்தீவு
1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி, பண்டாரநாயகவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டாங்க. அதை கருணாநிதி தடுத்திருந்தால் இந்த நிலை இருக்காது. ஆனால் கச்சத்தீவை கொடுக்கக் கூடாது என குரல் எழுப்பிய ஒருவர் யார் தெரியுமா? வாஜ்பாய்தான். தவறான செய்திகளை பரப்பாதீர் விஜய் என சரத்குமார் ஆவேசமாக பேசியிருந்தார்.
மதுரையில் விஜய் பேசியது என்ன
மதுரை தவெக மாநாட்டில் விஜய் பேசியது என்ன என்பதை பார்க்கலாம். அவர் பேசுகையில், "தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களே, 3ஆவது முறையாக மத்திய அரசின் அதிகாரத்தை நீங்கள்தானே கையில் வைத்துள்ளீர்களே. ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா?
இஸ்லாமிய நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் சதி செய்யவா? மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. மக்கள் சார்பாக உள்ளிடம் சில கேள்விகள் கேட்கணும். பிரைம் மினிஸ்டர் அவர்களே! மீனவர்களை பாதுகாப்பதற்காக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுங்கள். அது போதும்.
நீட் தேர்வு
மொரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்துவிடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே?" என தெரிவித்தார். தலைவா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்ற விஜய்யை, அவர் சந்திக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications