நீதிமன்ற தீர்ப்பில் இதை கவனிச்சீங்களா.. பொன்முடி வழக்கில் "இதை" ஏற்கவே முடியாது.. திமுக சரவணன் பரபர
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக திமுகவின் சரவணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.. இந்த காலகட்டத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்தாக தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பொன்முடி மனைவி விசாலாட்சியும் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து 2016இல் தீர்ப்பளித்தது.
பொன்முடி தண்டனை: இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017ஆம் ஆண்டு, சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு செய்யப்பட்ட நிலையில், இதை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுக் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி' பொன்முடி- சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை- அமைச்சர் பதவி பறிபோனது!
பதவி பறிப்பு: 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் 3 ஆண்டுகள் தண்டனை காலத்துக்குப் பிறகு அவரால் 6 ஆண்டுகள் பொன்முடி தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும், இதன் மூலம் அவர் திருக்கோவிலூர் எம்எல்ஏ பதவியையும் அவர் இழந்தார். அதேநேரம் பொன்முடி மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை 1 மாதம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்..
திமுக சரவணன்: இந்த விவகாரம் குறித்து டிவி சேனல் ஒன்றுக்கு திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இப்போது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் 30 நாட்கள் டைம் கொடுத்துள்ளனர். எனவே, தண்டனை மற்றும் தீர்ப்பை நிறுத்தி வைக்கவும் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும். இதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும்.
ஆனால், இந்த தீர்ப்பு ஏற்கனவே உள்ள சட்டத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. சொத்துக் குவிப்பு வழக்குகளில் நமது வருமான வரி தாக்கல் தான் பிரதானமானது. வருமான வரி தாக்கல் செய்யும் போது, பணத்தைக் குறிப்பிட்டுவிட்டால் அது சட்டப்படி சம்பாதித்த ஒன்றாகிவிடும்.
ரத்து செய்யும்: ஆனால், அந்த இந்த வழக்கில் நீதிபதி, நீங்கள் வருமான வரி தாக்கலில் சொல்லி இருந்தாலும் அதற்குத் தனியாகச் சாட்சியங்கள் எதுவும் இல்லை என்கிறார். இது ஏற்புடையது இல்லை. எனவே, இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் நிச்சயம் தண்டனையை ரத்து செய்யும்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே தானாகவே எம்எல்ஏ பதவி போய்விடும். எம்எல்ஏ பதவி போய்விட்டால் அமைச்சர் பதவியும் போய்விடும். ஆனால், இந்த விவகாரத்தில் நாங்கள் சுப்ரீம் கோர்ட் சென்று இந்த தீர்ப்பை நிறுத்தி வைப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications