ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் ஐக்கியம்! திமுக மாஜி அமைச்சரின் மருமகள்!
சென்னை: மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் சற்குணப்பாண்டியன் மருமகள் சிம்லா முத்துச்சோழன் திமுகவிலிருந்து விலகி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் சிம்லா முத்துச்சோழன். அதன் மூலம் தமிழகமெங்கும் அப்போது பிரபலமாக பேசப்பட்டார். வழக்கறிஞரான சிம்லா முத்துச்சோழன் திமுகவில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதே வடசென்னை தொகுதியை கேட்டார். அப்போது அவருக்கு சீட் கொடுக்காத திமுக தலைமை ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமிக்கு கொடுத்தது.

இதனால் அப்போதே அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகக் கூடும் எனக் கூறப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா விவகாரம் வந்துவிட்டதால் தொடர்ந்து திமுகவிலேயே இருந்த சிம்லா முத்துச்சோழன், 2021 சட்டமன்றத் தேர்தலிலாவது எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிட வேண்டும் என பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கட்சியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய மரியாதை இல்லை. இருப்பினும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலாவது தனக்கு எம்.பி.சீட் கிடைத்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.
ஆனால் இந்த முறையும் வடசென்னை மக்களவைத் தொகுதியில் மீண்டும் கலாநிதி வீராசாமி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இன்று பெரும் படையுடன் சென்று அண்ணா அறிவாலயத்தில் கலாநிதி வீராசாமி விருப்பமனுத் தாக்கல் செய்து கொண்டிருந்த வேளையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

சிம்லா முத்துச்சோழனின் மாமியார் சற்குணப்பாண்டியனை பொறுத்தவரை பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவர். திமுக மகளிரணியில் முக்கிய முகமாக திகழ்ந்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியையும் வகித்திருக்கிறார். அவரது மருமகள் திமுகவுக்கு குட் பை சொல்லிவிட்டு அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் இணைந்த பின்னணி பற்றி நாம் கேட்டதில், உட்கட்சி கோஷ்டி அரசியல் தான் எனவும் கோஷ்டிப்பூசலில் தாக்குப்பிடிக்க முடியாமல் தான் அவர் அதிமுகவுக்கு சென்றுவிட்டார் எனவும் தெரிவிக்கிறார்கள்.
2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்ட போது 30,000 தான் வாக்குகளில் தோல்வியை தழுவினார். அந்தளவுக்கு கடும் டஃப் கொடுத்தார். யாரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டாரோ, ஒரு காலத்தில் எந்தக் கட்சியை கடுமையாக சாடினாரோ, இன்று அதே கட்சிக்கு காலம் அவரை அழைத்து வந்து நிறுத்தியுள்ளது. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற கவுண்டமனியின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications