அட கால்ல விழாதீங்கப்பா.. மரியாதை மனதில் இருந்தால் போதும்.. புது பாணி அரசியலை கையில் எடுக்கும் சசிகலா
சென்னை: விரைவில் தீவிர அரசியில்ல சசிகலா ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, கடந்த 2021 தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் வெளியே வந்து இருந்தார். அவரது வருகை அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது.
இருப்பினும், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாகத் தேர்தலுக்கு முன்பு அறிவித்தார். தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், சசிகலா குறித்த பேச்சுகளும் அப்போதே எழுந்தன.

முழு நேர அரசியல்
இருப்பினும், அவர் அமைதியாகவே இருந்தார். சட்டசபைத் தேர்தலுக்குப் பின், திடீரென ஜெயலலிதா சமாதிக்குச் செல்வது உள்ளிட்ட அரசியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் அவர் விரைவிலேயே முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக ஆதரவாளர்கள் அவரை சந்திப்பதும், இது தொடர்பான படங்கள் வெளியாவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சசிகலா
சசிகலாவைச் சந்திக்கும் ஆதரவாளர்கள் அவரது காலில் விழுந்து வாழ்த்துகளைப் பெறுவது வழக்கம். இந்தச் சூழலில் தன்னை சந்திக்க வரும் யாரும் காலில் விழ வேண்டாம் என்று சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பேரியக்கம்.

எதுவும் வேண்டாம்
ஏழை எளியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் இரு கண்களாகப் பார்க்கும் கழக உடன் பிறப்புகளுக்கும், என்னை நேசிக்கும் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், என்னிடம் மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்குவதைத் தயவு செய்து தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏழைகளுக்கு உதவுங்கள்
அவ்வாறு, ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், நீங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ஏழை எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள், பள்ளிகளில், கல்லூரிகளில் கல்வி கற்க கட்டணம் செலுத்த முடியாத ஏழை எளிய மாணவச் செல்வங்களுக்கு உதவி செய்யுங்கள், பசியால் வாடுகின்ற ஏழை எளிய மக்களுக்கு உணவு அளியுங்கள்.

காலில் வீழ வேண்டாம்
கழக உடன்பிறப்புகள், இது போன்று தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே, அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேபோன்று, என்னை சந்திக்கும் பொழுது காலில் விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள், என் மீது நீங்கள் காட்டுகின்ற மரியாதையை மனதில் வைத்து கொண்டாலே போதும். எனவே, உங்கள் அனைவரது ஒற்றுமையும், ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications