"விரைவில் எனது தலைமையில் அதிமுக செயல்படும்!" நெருப்பை மீண்டும் பற்ற வைத்த சசிகலா.. இந்த முறை சக்சஸா?
சென்னை: திருமண நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சசிகலா அதிமுக குறித்தும் அதன் தலைமை குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா கலந்து கொண்டு மணமக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவின் ஓராண்டு ஆட்சி குறித்தும் அதிமுகவில் தற்போதுள்ள நிலை குறித்தும் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

சசிகலா
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு அரசு மக்களுக்கு நல்லது செய்தாலும் சரி, மக்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும் சரி அதை வெளியில் கொண்டு வருவது பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்தான். அதுபோன்ற நேரத்தில் அரசு தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர, செய்தியாளர்கள், ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல.

இப்போதைய அதிமுக
ஜெயலலிதாவுடன் அதிமுகவில் இப்போது இருப்பவர்களை ஒப்பிட முடியாது. கட்சித் தொண்டர்கள் முடிவு செய்து ஓர் இயக்கத்துக்குத் தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் எல்லோரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். இப்போது அதுபோன்ற நிலைமை இப்போது அதிமுகவில் இல்லை. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கத் தாமதம் ஏற்பட்டதும் கூட அதன் வெளிப்பாடு தான்.. தொண்டர்களும் மக்களும் கூட குறைகளை என்னிடம் கூறுகின்றனர்.

திமுக ஆட்சி
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. ஆனால் மக்களுக்கு அது எதுவும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். நிலைமை சீக்கிரம் மாறும்.ஜெயலலிதாவின் ஆட்சியை நாங்கள் விரைவில் அமைப்போம். மக்களின் கருத்தும் அப்படியே அமைந்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை எல்லாமே தொண்டர்கள்தான். அவர்கள் மீது இருக்கும் நம்பிக்கையில்தான் நான் அதிமுக தலைமை ஏற்பேன் என்று சொல்கிறேன். .

மேட்டூர் அணை
தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகமாகியுள்ளன. இதற்கு நிர்வாகத் திறன் குறைவே முக்கிய காரணம். காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் மே மாதத்தில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளது அதற்காகத் தான் இப்போது திமுகவினர் மாதத்தில் மேட்டூர் அணையைத் திறந்துவிட்டுள்ளனர். தூர்வாரும் பணி முடியாத நிலையில், மேட்டூர் அணையைத் திறந்துவிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனது தலைமையில் அதிமுக
அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து எனது தலைமையில் செயல்படுவார்கள். அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும். தமிழக அரசு மத்திய அரசுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் அதனால் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் தான். கடந்த ஓராண்டாகவே பட்டிமன்றம் போல திமுக இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications