புரட்சி பயணத்தை தொடங்கிய சசிகலா.. அதிமுக கொடி கட்டிய பிரச்சார வாகனம்.. தொண்டர்களை நோக்கி கையசைப்பு!
சென்னை: அறிவித்தபடி, தனது 'புரட்சிப் பயண'த்தை தொடங்கினார் சசிகலா. தொண்டர்களைச் சந்திக்கும் பயணத்தை தி.நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து தொடங்கியுள்ளார் சசிகலா.
Recommended Video
அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாக சசிகலா சமீபத்தில் அறிவித்தார். எம்ஜிஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என அறிவித்திருந்தார் சசிகலா.
அறிவித்தபடி, முதற்கட்ட சுற்றுப்பயணத்தை சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று தொடங்கியுள்ளார் சசிகலா. அதிமுக கட்சிக் கொடி கட்டிய பிரச்சார வாகனத்தில் சசிகலா பயணத்தை தொடங்கியுள்ளார். சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்ல இருக்கிறார் சசிகலா. அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்க இருக்கிறார். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை,எஸ்விஜி புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்க்கிறார். ஆர்.கே.பேட்டையில் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்த இருக்கிறார். பிறகு, அம்மையார்குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்குப் பிறகு அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.