குறி பார்த்த சசிகலா.. காருக்குள் வந்து பேசிய அந்த நபர்.. விடாமல் நோட்டமிட்ட அதிமுக.. தஞ்சையில் பரபர
சென்னை: தஞ்சாவூரில் குலதெய்வ கோவில் வழிபாட்டின் போது சசிகலாவிடம் கோவில் பூசாரி சொன்ன சில விஷயங்கள் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சசிகலா நடத்திய மீட்டிங் ஒன்றும் அதிக கவனம் பெற்றுள்ளது.
சசிகலாவின் குலதெய்வ கோவில் வழிபாடுதான் தற்போது தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக். நேற்று முதல்நாள் இரவு தஞ்சாவூர் சென்ற சசிகலா நேற்று குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தினார். விளார் கிராமத்தில் உள்ள அவரது குல தெய்வமான வீரனார் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.
பெரிய அளவில் கூட்டத்தோடு உறவினர்கள் பலர் சசிகலா உடன் இருந்தனர். அதன்பின் திருவிடைமருதூர் கோவிலிலும் சசிகலா வழிபாடு நடத்தினார். இங்கு பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன.

தகவல்
இந்த குலதெய்வ கோவிலில் நடந்த சம்பவங்கள் குறித்து நிறைய செய்திகள் வெளியாகி வரும் நிலையில் முக்கியமான சில தகவல்களும் தற்போது கசிந்து வருகின்றன. இந்த கோவிலில் சசிகலா வழிபடும் போதே.. கோவில் பூசாரி ஒருவருக்கு திடீரென சாமி வந்துள்ளது.. சாமி வந்த பூசாரியோ சசிகலாவை பார்த்து ஆக்ரோஷமான குரலில் குறி சொல்லிக்கொண்டு இருந்தார்.

குறி சொன்னார்
அம்மா.. நீ இங்க ரொம்ப நாள் அப்பறம் வந்து இருக்க.. உனக்கு இனி பிரச்சனையே இல்ல.. எல்லாம் சரியாக போகுது. உன் தெய்வத்தை நம்பு.. எல்லாம் சரி ஆகி.. நீ சந்தோசமா இருக்க போற..பகை எல்லாம் அகல போகுது. நம்பிக்கையை மட்டும் விடாத என்று அந்த பூசாரி சாமி ஆடியபடியே கூறி இருக்கிறார்.

சசிகலா நிலை
இதை கேட்டு ஒரு நிமிடம் சசிகலா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று இருக்கிறார். முகத்தில் எந்த சலனமும் இன்றி சசிகலா இதை கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்து இருக்கிறார். இந்த பயணத்திற்கு சசிகலா தரப்பில் இருந்து 25+ கார்கள் அந்த கோவிலுக்கு சென்றுள்ளது. சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் வந்து இருந்தனர்.

யார்
இந்த நிகழ்விற்கு பின் சசிகலா தனது காரில் முக்கியமான நபர் ஒருவரையும் பார்த்து இருக்கிறார்.. சுமார் 15 நிமிடம் இவர்கள் தனியாக பேசி உள்ளனர். இவர் யார் என்பது மட்டும் பெரிய சீக்ரெட்டாக இருக்கிறது.. பல முக்கிய விஷயங்களை இவர்கள் தீவிரமாக பேசி உள்ளனர்.
இது போக அமமுக நிர்வாகிகள் பலரும் கூட இங்கே வந்திருத்தனர். ஆனால் அனைத்திற்கும் மேல் அதிமுகவை சேர்ந்த சிலரும் இந்த வருகையை தீவிரமாக கண்காணித்து உள்ளனர். சசிகலா என்ன செய்கிறார்.. எங்கே போகிறார்.. யாரிடம் எல்லாம் பேசுகிறார் என்று அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக கணித்து வருகிறார்களாம்.

தஞ்சை
தஞ்சையில் இருக்கும் சில நிர்வாகிகள் இதை அருகில் இருந்து கண்காணித்துள்ளனர். சசிகலா மீட் செய்த அந்த நபர் யார் என்று விசாரணைகள் நடந்து வருகிறது. ஆனால் சசிகலாவோ அதிமுகவிற்கு எதிராக எதுவுமே பேசவில்லை என்கிறார்கள்.. கோவிலில் முழுக்க தன்னுடைய மனக்கஷ்டம் குறித்து மட்டுமே சசிகலா பேசினார். உறவினர்கள் குறித்து பேசினார். காது குத்து பற்றி பேசினார். ஆனால் அரசியல் எல்லாம் பேசவே இல்லை.. அவருக்கு அரசியல் மீது ஆர்வம் இருப்பது போலவே தெரியவில்லை என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.

நெருக்கம்
சசிகலா குறித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசியதில்.. சசிகலாவின் இந்த கோவில் வருகை அவரின் உறவினர்களை ஒன்றாக்கி உள்ளது. 4 வருடம் சிறையில் இருந்து ஒருவர் வந்தால் அவர் உறவினர்களை சந்திப்பார்.. கோவில்களுக்கு செல்வார். அப்படித்தான் இதுவும். இதில் அரசியல் எல்லாம் இல்லை. 27 வருடத்திற்கு பின் இப்படி அவர் எங்கள் கோவிலுக்கு வருகிறார்.

கஷ்டம்
சசிகலா கொஞ்சம் மனக்கஷ்டத்தில் இருக்கிறார். கோவிலுக்கு வந்தால் சரியாகுமென்று அவர் நினைக்கிறார். தன்னுடைய உறவுகள் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். உறவுகளை புதுப்பிக்க , சில கசப்புகளை மறக்கவே இந்த திடீர் விசிட்.. இதில் பாலிடிக்ஸ் எல்லாம் இல்லை என்கிறார்கள். ஆனால் அந்த கார் மீட் பற்றி மட்டும் வாயை திறக்கவில்லை.

அதிமுக தரப்பு
அதிமுக தரப்பில் இதை கவனித்து வந்தாலும் .. சசிகலா குறித்து அதிமுக தரப்பு வெளிப்படையாக கவலையே படவில்லையாம். தேர்தல் வரை சசிகலா பிரச்சனையில்லை. தேர்தலுக்கு பின் என்ன நடக்கிறதோ பார்த்துக் கொள்ளலாம். இப்போது சசிகலா என்ன செய்யட்டுமோ செய்யட்டும்.. ஒரு கண் மட்டும் வைத்துக்கொள்வோம் என்று அதிமுக நினைப்பதாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications