சசிகலாவின் ஆலோசனையின்படி செயல்படுகிறோம்... தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு
சென்னை: சசிகலாவின் ஆலோசனையுடன் தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று தேனி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அமமுகவின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், கட்சியின் பொதுச்செயலாளராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிடிவி தினகரனால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருந்து வந்தார். அதிமுகவை மீட்பதாக கூறி தொடர் சட்டப்போராட்டம் நடத்தியதால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார்.

தற்போது, நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், இன்று கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச் செல்வன், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய உள்ளதால் தினகரனை பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம் என்றார். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் அமமுகவின் தலைவராக இருப்பார் என்றும், அமமுகவின் துணைத்தலைவர் தேர்வு விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
வருகிற மே 19 அன்று நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications