அம்மாவின் வழியில் மக்கள் பயணம்..அடுத்த அட்டாக்கை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடி சொன்ன ‘அதே’ தேதி..!
சென்னை: அதிமுகவில் மீண்டும் சசிகலாவைச் சேர்க்க வேண்டுமென கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் குரல்கள் எழுந்ததாக கூறப்பட்ட நிலையில், 'அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா' என்ற பெயரோடு, "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" தென்காசியில் இருந்து தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பயணத்தை தொடங்கும் அந்த தேதி தான் முக்கியம் என்கின்றனர் சசிகலா ஆதாரவாளர்கள்.
கடந்த சில நாட்களாம அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

அப்படி நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்ததாகவும், அதற்கு எடப்பாடி கடுமையாக மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வரும் 17ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் தேனி, திண்டுக்கல், தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் மொகரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் வரும் 17ம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அன்றைக்குத் தான் சசிகலா தென்காசியில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவன் நல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" தொடர்ந்து மேற்கொள்கிறார்.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார்.
வருகின்ற 17-07-2024 புதன்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு தென்காசி ஒன்றியம், காசிமேஜர்புரத்திலிருந்து "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" ஆரம்பித்து தென்காசி, கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
இரண்டாம் நாளாக 18-07-2024 வியாழக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு தென்காசி ஒன்றியம் பிரானூர் பார்டர் பகுதியிலிருந்து "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" ஆரம்பித்து தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
மூன்றாம் நாளாக 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு வாசுதேவநல்லூர் ஒன்றியம் புளியன்குடியிலிருந்து "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" ஆரம்பித்து வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
நான்காம் நாளான 20-07-2024 சனிக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு மேலநீலிதநல்லூர் ஒன்றியம், நடுவக்குறிச்சியிலிருந்து "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" ஆரம்பித்து மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில்" கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது. எனவே சசிகலா பயணம், காரணமாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அதிமுக வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications