எடப்பாடிக்கு பதிலடி தந்த பிரேமலதா? விஜயகாந்த் ஐடியில் போட்ட பதிவு.. டெலிட் செய்தது ஏன்? பரபர பின்னணி
சென்னை: தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அதிமுக கூறியிருக்கிறதா என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று கேள்வி எழுப்பினார். இதன்மூலம் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை என்பதை அவர் உறுதி செய்துள்ள நிலையில் தேமுதிக அதிருப்தியாகி உள்ளது. இதற்கிடையே தான் விஜயகாந்தின் எக்ஸ் பக்கத்தில் ‛சத்தியம் வெல்லும்.. நாளை நமதே'' என்று போடப்பட்ட பதிவு திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் விரைவில் 6 ராஜ்யசபா எம்பி பதவி காலியாக உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் தேமுதிகவில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களுக்கு ஒருவர் எம்பியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

இதுபற்றி சமீபத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர், ‛‛அதிமுக உடன் கூட்டணி அமைந்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. ராஜ்யசபா தேர்தல் வரும்போது வேட்பாளரை அறிவிப்போம். நாங்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம்'' என்று கூறினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டது. அப்போது ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டதாக தேமுதிக கூறியது. இந்நிலையில் தான் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‛‛தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறதே அது உண்மையா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛அதிமுக எங்காவது அப்படி சொல்லியிருக்கிறதா? தேவையின்றி யார் யாரோ சொல்லியிருப்பதை எல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் பாருங்கள்'' என்று கூறினார். இதன்மூலம் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் என்பது ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து உறுதி செய்கிறது.
இதனால் ராஜ்யசபா சீட்டை எதிர்நோக்கி உள்ள தேமுதிகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தேமுதிக நிறுவனரும், மறைந்த நடிகர் விஜயகாந்தின் எக்ஸ் பக்கத்தில் இன்று மாலையில் ஒரு பதிவு செய்யப்பட்டது. அதில், ‛‛சத்தியம் வெல்லும்.. நாளை நமதே'' என்று கூறப்பட்டு இருந்தது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிடப்பட்டதாகவும், பிரேமலதா உத்தரவில் இந்த பதிவு என்பது விஜயகாந்தின் எக்ஸ் பக்க ஐடியில் பதிவிடப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.
அதோடு ராஜ்யசபா சீட்டால் அதிமுக - தேமுதிக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின. இப்படியான சூழலில்தான் அடுத்த சில நிமிடங்களில் விஜயகாந்தின் எக்ஸ் பக்க ஐடியில் போடப்பட்ட ‛சத்தியம் வெல்லும்.. நாளை நமதே'' என்ற பதிவு டெலிட் செய்யப்பட்டது. இருப்பினும் அந்த பதிவு தொடர்பான ஸ்கிரீன்ஷாட் இணையதளங்களில் பரவி வருவதோடு, அதிமுக - தேமுதிக கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்பி விடப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications