ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி விழாவில் ராகுல் பங்கேற்பு.. தேர்தல் விதிகள் மீறப்படவில்லை- தேர்தல் ஆணையம்
சென்னை: சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றதில் தேர்தல் விதிகள் எதுவும் மீறப்படவில்லை என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மார்ச் 13-ஆம் தேதி சென்னை வந்திருந்தார். அங்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் அரசியல் கேள்விகளை மாணவிகள் எழுப்பினர். அப்போது மத்திய அரசின் திட்ட குளறுபடிகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகள் குறித்து ராகுல் காந்தி பதில் அளித்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி நிகழ்ச்சியை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடத்த அனுமதி அளித்தது எப்படி என்று விசாரிக்க கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனைத்திலும் புதுமையை புகுத்திய மநீம.. 20-இல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. எதிர்பார்ப்பில் தமிழகம்
ராகுல் காந்தி
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி என்று விசாரிக்குமாறு மண்டல இணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ்
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அனுப்பிய நோட்டீசை உடனே அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆட்சேபனை
கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடையாக இல்லை என்றும் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் ராகுல் உரையாற்றியதற்கு ஆட்சேபனை செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார்.
விதிகள்
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் ஸ்டெல்லா மேரீஸ் நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டதில் விதிகள் எதுவும் மீறப்படவில்லை.
அனுமதி
இதை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்திய பிறகு என்னிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி முறைபடி முன்கூட்டியே அனுமதி பெற்றுதான் நடந்தது என சாஹூ தெரிவித்தார்.