பசங்களா மழைக்கு ஸ்கூல் லீவா? ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. கூடவே ஒரு சோக செய்தியும் இருக்கு!
சென்னை: தமிழகத்தில் மழைக்காலம் முடிந்ததும் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்னிந்தியாவுக்கு மழைப் பொழிவை கொடுக்கும் சீசன் இது!. இந்த சீசனில் வங்கக் கடலில் காற்றழுத்தம், புயல் உருவாகும். அது போல் கனமழை பெய்தாலே சாலைகளில் தண்ணீர் தேங்கும்.

இந்த நிலையில் கனமழை பெய்தாலும் மழை குறித்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தாலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பர். சில நேரங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள சில தாலுக்காக்களுக்கு மட்டும் கூட இந்த விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக நேற்றைய தினமும் இன்று அதிகாலையும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 16ஆம் தேதி நிலவும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பலத்த மழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் திருவண்ணாமலையிலும் கொடைக்கானலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய தாலுக்காக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஆரம்பம், இனி புயல் உருவானால் விடுமுறைகள் அதிகரிக்கக் கூடும்.
இதனால் மாணவர்களுக்கு வகுப்புகளை குறிப்பிட்ட காலத்திற்குள் எடுத்து முடிப்பதில் பிரச்சினை ஏற்படும். இதனால் பள்ளிக் கல்வித் துறை ஒரு முடிவு செய்துள்ளது. அதன்படி மழைக்காலம் முடிந்த பிறகு வாரந்தோறும் பள்ளிகளுக்கு வேலை நாள் அறிவிக்கப்படுகிறது. மழைக் கால விடுமுறையை ஈடுகட்ட பள்ளிக் கல்வித் துறை இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இந்த சனிக்கிழமை வேலை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து பாடப்பிரிவுகளை விரைந்து முடிக்கலாம். அதே வேளையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுவது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications