தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் - அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
மறைந்த எஸ்பிபியின் உடல் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. அங்கு யாருக்கும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
சென்னை: மறைந்த எஸ்பிபியின் உடல் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பண்ணை வீட்டில் அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். அவரது உடல் மாலை நான்கு மணியளவில் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.

திரை உலக பிரபலங்களும்,அரசியல் கட்சித்தலைவர்களும் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். மக்கள் கூட்டம் அதிகரிக்கவே, எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து தாமரைப்பாக்கத்திற்கு வாகனத்தில் கொண்டு செல்லும் வழியெங்கும் ஏராளமானோர் வாகனத்தை நிறுத்தி செல்போனில் படம் பிடித்தனர். எஸ்.பி.பியின் தீவிர ரசிகர்கள் இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர். கொரோனா தொற்று காரணமாக பண்ணை வீட்டில் அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி இல்லை.

எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இதையடுத்து அங்கு நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் மரியாதையுடன் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

எஸ்பிபி அடக்கம் செய்ய உள்ள தாமரைப்பாக்கம் பண்ணையில் 4 டிஎஸ்பிகள் தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே வாகன தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications