ஓபிஎஸ் தரப்புக்கு செக் வைத்த சிவி சண்முகம்.. பொதுக்குழுவை நேரில் கூட்டாமலே கருத்தையறியலாம் என பேட்டி
கடிதத்தின் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் கருத்தை பெற வாய்ப்பு இருப்பதனால் ஓபிஎஸ்சை உள்ளே கூப்பிட அவசியம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கடிதத்தின் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் கருத்தை பெற வாய்ப்புள்ளது. இதனால் ஓபிஎஸ்சை உள்ளே கூப்பிட அவசியம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிட கடந்த 31ம் தேதி முதல் வருகிற 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளரை பொதுக்குழுவே முடிவு செய்யும்.. தீர்ப்பால் எடப்பாடி vs ஓபிஎஸ் யாருக்கு சாதகம்? 7 பாயிண்ட்ஸ்
இடையீட்டு மனு தாக்கல்
அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் இரட்டைஇலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் பதில் மனு
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் இடையீட்டு மனு விசாரிக்கப்பட்து. பழனிசாமியின் இடையீட்டு மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று பதில் மனுவை தாக்கல் செய்தது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை நாங்கள் ஏற்கிறோம் என்று கூறப்பட்டது.
சி.வி சண்முகம் பேச்சு
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யலாம் என்றும், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ராஜ்யசபா உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சின்னத்தை யாருக்கு கொடுக்க வேண்டும்
வேட்பாளர் தேர்வு குறித்த பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை கடிதம் மூலம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவில் யார் பெரும்பான்மை வாக்குகளை பெறுகிறாரோ அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார். இருதரப்பும் கையெழுத்து போடுவது சாத்தியமில்லாதது. தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு எடுப்பதற்கான ஒரு தெளிவான தீர்ப்பு இது.
ஊரறிந்த உண்மை
அதிமுக பொதுக்குழு கூடும் .பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூட்டுவார். பொதுக்குழுவால் பரிந்துரைக்கப்படும் பெயரை பெருவாரியான வாக்குகளை பெற்ற பிறகு, தேர்தல் ஆணையத்திற்கு அவைத்தலைவர் பரிந்துரைக்கப்பட வேண்டும். அதன்படி தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவு இந்த தேர்தலுக்கு மட்டும் தான். வேறு எதற்கும் பொருந்தாது. அதிமுக யார் பக்கம் உள்ளது.. பொதுக்குழு உறுப்பினர்கள் யார் பக்கம் உள்ளார்கள் என்பது ஊரறிந்த உண்மை. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்பும் இப்போதும் அமலில் உள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டது. இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.
கடிதத்தின் மூலம் கருத்து
சண்முகம் பேட்டியை வைத்து பார்த்தால் கடிதத்தின் வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றே தெரிகிறது. எனவே எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் ஒரே இடத்தில் பொதுக்குழுவிற்காக கூடி சந்திக்க வேண்டிய நிலை வராது என்றே தெரிகிறது. வரும் 7ம் தேதி ஈரோடு கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே அதற்கு முன்பாக பொதுக்குழுவை கூட்டி உறுப்பினர்களிடம் நேரில் கருத்து கேட்க முடியாது என்ற வாதத்தை தமிழ்மகன் உசேன் முன்வைத்து கடிதத்தின் மூலம் கருத்து கேட்பார் என்று தெரிகிறது. இது எடப்பாடி தரப்புக்கு சாதகமாகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.