மீண்டும் உயிர் பெற்ற பெண் கொடுமை புகார்.. ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீதான வரதட்சணை புகார் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றதோடு வரும் நாட்களில் இதில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீதான வரதட்சணை புகார் உயர் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ளவர் வருண் குமார். 2011 பிரிவில் இந்தியா காவல் பணியில் தேர்வாகினார். இவர் மீதுதான் தற்போது வரதட்சணை புகார் வைக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?
2010ம் ஆண்டு சென்னையில் தனியார் பயிற்சி மையத்தில் இவர் ஆட்சி பணியாளர் தேர்வுகளுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார். அங்கு படிக்கும் போது பிரியதர்ஷினி என்ற பெண்னை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வீட்டில் தெரிந்த நிலையில், வீட்டு சம்மதத்தோடு இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்குத்தான் வருண்குமார் அதிக வரதட்சணை கேட்டதாக புகார் வைக்கப்படுகிறது.

ஐபிஎஸ்
ஐபிஎஸ்ஆகும் முன் இவரின் போக்கு வேறு மாதிரி இருந்ததாகவும், ஐபிஎஸ் ஆன பின் இவரின் போக்கே மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராக டெல்லி சென்ற வருணுக்கு பக்கபலமாக பிரியதர்ஷினி இருந்துள்ளார். தேர்வு நேரத்தில் இவர் தயாரான போது வருணுடன் அன்பாக பிரியதர்ஷினி பழகி வந்தார். இந்த நிலையில் ஐ.பி.எஸ்.ஆக பணி கிடைத்தவுடன் வருண் பிரியதர்ஷினியுடன் நடத்தும் விதம் மாறியுள்ளது. அதோடு திருமணம் செய்வதற்கு இவர் வரதட்சணை அதிகம் கேட்டுள்ளார்.

வரதட்சணை
நான் ஐபிஎஸ் ஆகிவிட்டேன்.. எனவே பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் வரதட்சணையாக 2 கிலோ தங்கம், 50 லட்சம் ரொக்கம் மற்றும் பி.எம்.டபிள்யூ சொகுசு காரை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் திருமணம் நடக்காது என்று வருண்குமாரும் அவரின் பெற்றோரும் கேட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று பல அதிகாரிகள் திருமணத்துக்கு வரதட்சணை பெற்றுள்ளனர், இது வழக்கம்தான். நான் இப்போது உயர் பதவியில் இருப்பதாக இப்படி கொடுக்க வேண்டும் என்றும் வருண்குமாரிடம் பிரியதர்ஷினி கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டை வந்தது
இந்த வரதட்சணை விவகாரம் மோதலில் வெடிக்கவே இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது, இதையடுத்து வருண் குமார் மீது நடவடிக்கை எடுக்க பிரியதர்ஷினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.ஆனால் காவல்துறையினர் முதலில் வழக்கு பதியவில்லை என கூறப்படுகிறது. இவர் உயர் அதிகாரி என்பதால் தனக்கு உள்ள ஆதரவை வைத்து விசாரணை நடக்க விடாமல் தடுத்ததாக பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

பிரியதர்ஷினி புகார்
இந்நிலையில் பிரியதர்ஷினியை வருண் குமார் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அவரது மின்னஞ்சலை ஹேக் செய்து இருவருக்குமிடையே நடைபெற்ற உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களை வருண்குமார் அழித்ததாகவும், தன்னை தொடர்ந்து மிரட்டும் வகையில் வருண்குமார் பேசியதாகவும் பிரியதர்ஷினி புகார் அளித்துள்ளார். அதோடு பிரியதர்ஷினியை திருமணமும் செய்யாமல் வருண் ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரியதர்ஷினியுடன் காதலில் இருந்தவர் வரதட்சணை பிரச்சனை காரணமாக வந்தனா பாண்டே என்ற ஐ.பி.எஸ் அதிகாரியை திருமணம் செய்தார்.

திருமணம்
இந்த நிலையில் வருண்குமார் மீதான புகாரில் போலீசார் வழக்கு பதியாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். தான் கொடுத்த புகாரில் வழக்கு பதியப்படவில்லை எனக்கூறி பிரியதர்ஷினி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இதைதொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வருண்குமார் மீதும், தாய் கல்பனா மற்றும் தந்தை வீரசேகரன் மீது 406, 417, 420, 506/2, பெண் கொடுமை தடுப்பு சட்டம், தகவல்தொழில்நுட்ப சட்டம் 66 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கைது
ஆனால் அதற்குள் இந்த வழக்கில் வருண்குமார் நிபந்தனையுடனான முன்ஜாமீன் பெற்றார், ஆனால் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்காததையடுத்து, அவரது முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கைதுக்கு பயந்து வருண்குமார் தலைமறைவானார். போலீசார் இவரை தேடி வந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுவிப்பு
இவர் மீதான வழக்கு காரணமாக ஒழுங்கு நடவடிக்கையாக அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவும் பிறப்பித்தது.அதன் பின்னர் இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வருண் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதோடு இவர் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கு எதிரான புகார்கள் என்று அவர் வாதம் வைத்தார். இதில் கடந்த 26-06-2018ல் வருண்குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேல்முறையீடு
இதனால் இந்த வழக்கில் இருந்து வருண்குமாரை விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனு தொடர்ச்சியாக இத்தனை நாட்களாக விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.குறிப்பாக பல்வேறு சாட்சி விசாரணை நடத்திய பின்னரே விசாரணை நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ஏற்றது. இதை ரத்து செய்தது தவறு. உயர்நீதிமன்றம் முறையான விசாரணை இல்லாமல் குற்றப்பத்திரிகையை ரத்து செய்துள்ளது என்று தனது மனுவில் பிரியதர்ஷினி குறிப்பிட்டார். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அட்வான்ஸ் நோட்டீஸ் பெற்று வழக்கில் எதிர்தரப்பாக ஆஜராகியிருந்தது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருண்குமாரின் தாய், தந்தை உள்ளிட்டோருக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications