இளைஞர்களே உஷார்.. டெலிகிராமில் லிங்க்.. தொட்டதும் மொத்த பணமும் போயிடும்.. சேலத்தில் சிக்கிய கும்பல்
சென்னை: வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து ஆன்லைனில் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக சேலத்தை சேர்ந்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். டெலிகிராமில் லிங்க்கை அனுப்பில் அதனை கிளிக் செய்தவர்களிடம் இருந்து நூதன முறையில் பணத்தை இந்த நபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.
டெலிகிராமில் வந்த லிங்கை கிளிக் செய்ததாகவும், இந்த லிங்கை கிளிக் செய்த சிறிது நேரத்தில் வங்கிக்கணக்கில் இருந்த பணம் அபேஸ் செய்யப்பட்டதாக வேலை தேடும் இளைஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து 6 லட்சத்து 72 ஆயிரம் பணம், 7 செல்போன்கள், 19 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியை எப்படி அரங்கேற்றினார்கள் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஒருபுறம் தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மறுபுறம் அதை வைத்தே மோசடி சம்பவங்களும் அரங்கேறுகின்றன. பணம் எடுப்பது, பணத்தை டிரான்ஸ்பர் செய்வது என அனைத்தும் தற்போது எளிதாகிவிட்ட நிலையில், இந்த பணத்தை அபேஸ் செய்யவும் இணைய மோசடிகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் ஈரோட்டில் வேலை தேடும் இளைஞர் ஒருவர், தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுவிட்டதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வேலை தேடும் இளைஞர்களுக்காக ஜாப் இருக்கிறது என்று டெலிகிராமில் ஒரு லிங்கை அந்த மர்ம நபர்கள் அனுப்பி இருக்கிறார்கள். வேலை தேடும் இளைஞர்கள் பலரும் அந்த லிங்கை கிளிக் செய்து அதில் அவர்கள் கேட்கும் விவரங்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதையடுத்து செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி விவரங்களை கேட்டு பணத்தை அபேஸ் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த 2 பேரை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 6 லட்சத்து 72 ஆயிரம் பணம், 7 செல்போன்கள், 19 ஏடிஎம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக்கில் வரும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள் எனவும், அப்படி கிளிக் செய்து பணத்தை இழந்தால் மீட்பது கடினம் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக ஈரோடு போலீஸ் அதிகாரி கூறுகையில், சமீக காலமாக நாடு முழுவதுமே சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக போதிய விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இது போன்ற மோசடிகள் அதிகரித்தபடியே உள்ளன. எனவே இதனை தடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் கூடுதல் சைபர் கிரைம் அதிகாரிகள் அறிவுறுத்தியது படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வரும் முன் காப்போம் என்ற நடவடிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனென்றால் ஒரு முறை இது போன்ற ஆன்லைன் பண மோசடியில் பணத்தை இழந்துவிட்டால் அதனை திரும்பப் பெறுவது என்பது மிகவும் சிரமமான விஷயம். எனவே வரும் முன் காப்போம் என்பதின் படி, தேவையில்லாத, அவசியமில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
குறிப்பாக வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராமில் இதை கிளிக் செய்தால் உங்களுக்கு இரண்டு மடங்கு பணம் கிடைக்கும், இதை கிளிக் செய்தால் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும், கிப்ட் கிடைக்கும் என வரும் லிங்குகளை தொடக்கூடாது. அறிமுகம் இல்லா நபர்களிடம் இருந்து வரும் லிங்குகளில் இந்த டாஸ்கை கம்ப்ளீட் செய்தால் உங்களுக்கு இவ்வளவு பணம் வரும், இதில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு பணம் வரும் என்பது போன்ற லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்.
நம்முடைய அனுமதியின்றி 90 சதவீதம் வங்கி கணக்கு விவரங்களை யாராலும் எடுக்க முடியாது. ஆனால் இந்த மோசடியாளர்கள் என்ன செய்வார்கள் என்றால், உங்களை அதில் ஏமாற வைத்து, ஆன்லைன் ஜாப் தருகிறோம்.. உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு.. இப்படி எதாவது ஒன்று சொல்லி உங்களிடம் இருந்து தான் வங்கி கணக்கு விவரங்களை பெறுகிறார்கள். இதில் அதிகம் ஏமாறுவது படித்த இளைஞர்கள் தான்.
25 வயது முதல் 55 வயதுடையவர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்துவிடுகிறார்கள். படிக்காதவர்கள் இதில் ஏமாறுவது இல்லை. படித்த இளைஞர்கள், ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம் ஏமார்ந்து போய்விடுகிறார்கள். எனவே விழிப்புணர்வுடன் இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications