கிராம சபைக் கூட்டத்தில் 'மக்கள் பள்ளி' பற்றி எடுத்துரையுங்கள்; கல்வி அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு..!
சென்னை: அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கல்வித்துறை அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் பள்ளி என்ற புதிய திட்டத்தை பற்றி கிராம சபைக் கூட்டத்தில் எடுத்துரைத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பெற்றோருடன் விவாதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பள்ளி திட்டம் என்பது வீடுகளுக்கே சென்று ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை தன்னார்வலர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாகும்.

பள்ளிக்கல்வித்துறை
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்ற நாள் முதல் துறை ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த என்னென்ன வழிகள் உள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்கிறார்.

ஆலோசனைகள்
கடைநிலையில் உள்ள ஆசிரியர் முதல் துறையின் இயக்குநர் வரை அனைவரிடமும் ஆலோசனைகளை பெற்று அதற்கேற்றவாறு முடிவுகளை அமைத்துக்கொள்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். இதனிடையே கொரோனாவால் மூடப்பட்டிருந்த பள்ளிகளை மீண்டும் முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் அவர் மக்கள் பள்ளி என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

சுற்றறிக்கை
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனிடையே நாளை காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கல்வித்துறை அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் சுதன் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

கற்றல் இடைவெளி
கொரோனா காரணமாக ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சீர் செய்ய மக்கள் பள்ளி திட்டம் மூலம் கல்வித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications