சந்திரயான் அனுபவம் இருந்தாலும் கூட.. இது வேற! ககன்யான் திட்டத்தின் சோதனை குறித்து விஞ்ஞானி விளக்கம்
சென்னை: ககன்யான் திட்டம் மூலம் விரைவில் இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கும் நிலையில், வரும் 21ம் தேதி, இந்த திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த சோதனை ஓட்டம் குறித்து மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கியுள்ளார்.
வரலாற்று சாதனை: விண்வெளி துறையில் இந்தியா இன்னமும் வளர வேண்டும் என்றும், பல கோடி மக்கள் இப்போதும் வறுமையில் இருக்கும் நிலையில், எதற்காக இந்தியா விண்வெளித்துறைக்கு இவ்வளவு செலவு செய்கிறது? எனவும் அவ்வப்போது சில மேற்கு நாடுகள் கிண்டலாக கேள்வியெழுப்புவதுண்டு. ஆனால் கடந்த மாதம் 23ம் தேதி இஸ்ரோ செய்த தரமான சம்பவம், கேள்வியெழுப்பிய நாடுகளின் வாயை ஒட்டுமொத்தமாக அடைத்துவிட்டன. அதாவது நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த லேண்டரும் தரையிறங்கியது கிடையாது. விண்வெளி துறைக்கு முன்னோடியான ரஷ்யாவே இந்த மிஷனில் தோல்வியடைந்த நிலையில், இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 லேண்டர் பத்திரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

ஏக்கம்: இந்த வெற்றிக்கு பின்னர், இஸ்ரோ தொடங்கும் திட்டங்களில் இணைந்து பணியாற்ற பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. இப்படி இருக்கையில்தான் தனது கனவு திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. இது இஸ்ரோவினுடைய கனவு திட்டம் மட்டும் கிடையாது, 120 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் 40 ஆண்டுக்கால ஏக்கமும் கூட. ககன்யான் என்பதுதான் இந்த திட்டத்தின் பெயர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
ரஷ்யாவின் உதவி: இந்தியா விண்வெளிக்கு சொந்தமாக, செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் அனுப்பியிருந்தாலும் மனிதர்கள் இதுவரை அனுப்பவில்லை. ஆனால் இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா எனும் விமானப்படை வீரரை ரஷ்யா கடந்த 1984ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. சோவியத் ரஷ்யாதான் விண்வெளி துறையை பொறுத்த அளவில் இந்தியாவுக்கு உற்ற நண்பன். இந்தியா போன்ற வளர்ந்து வந்த நாடுகளுக்கு விண்வெளி மீதான ஆர்வத்தை தூண்ட இந்த நாடுகளிலிருந்து வீரர்களை தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு அழைத்து செல்ல முன்வந்தது சோவியத் ரஷ்யா.
சோதனை: அப்படிதான் இந்தியா சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பறந்தார் ராகேஷ் ஷர்மா. அவர் பறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனால் இன்னும் ஒரு இந்தியர் கூட விண்வெளிக்கு மீண்டும் போகவில்லை. இந்த 40 ஆண்டுக்கால ஏக்கத்திற்கு ககன்யான் திட்டம் நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை ஓட்டம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டம் குறித்து மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வர் பிரத்யேகமாக சில தகவல்களை நம்மிடையே பகிர்ந்திருக்கிறார்.
எல்விஎம் III: அதாவது, "ஏற்கெனவே நமக்கு விண்கலன்களை விண்வெளிக்கு கொண்டு சென்ற அனுபவம் இருக்கிறது. ஆனால், இது முற்றிலும் மாறுபட்டது. லாரியில் பொருட்களை கொண்டு செல்வதற்கும், பேருந்தில் மனிதர்களை ஏற்றி செல்வதற்கும் இடையே உள்ள வித்தியாசம் போல. இரண்டிலும் ஒரே மாதிரியான சக்கரங்கள்தான் இருக்கும். ஆனால் சில மாற்றங்கள் பேருந்துக்கு தேவைப்படுகிறது. அதுபோலதான் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் மாற்றங்களை செய்து அதை எல்விஎம் III என மாற்றியுள்ளோம்.
ஏன் சோதனை?: அதாவது இந்த எல்விஎம் III ராக்கெட்டின் முனையில் பிரத்யேகமான வடிவமைப்பு ஒன்று இருக்கும். இதில்தான் மனிதர்கள் இருப்பார்கள். ஒருவேளை விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த பிரத்யேக வடிவமைப்பு ஒரு தனி ராக்கெட் போல செயல்பட்டு தனியே சென்றுவிடும். இதன் மூலம் விண்வெளி வீரர்களின் உயிரை காப்பாற்ற முடியும். இந்த அமைப்பைதான் வரும் 21ம் தேதி இஸ்ரோ பரிசோதனை செய்து பார்க்கிறது. இதுபோன்ற பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட பிறகுதான் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications