தலையில் வீசப்பட்ட கத்தரிக்கோல்.. பதறிப்போன எழும்பூர் திமுக எம்எல்ஏ.. சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னை: சென்னையில் செயற்கை புல் தரை கால்பந்து மைதானத்தை எழும்பூர் திமுக எம்எல்ஏ பரந்தாமன் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் தலையில் கத்தரிக்கோல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை எழும்பூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பரந்தாமன். இவரது தொகுதிக்கு உட்பட்ட ரெங்காச்சாரி தெருவில் மாநகராட்சி மைதானம் அமைந்துள்ளது.

இந்த மைதானத்தில் செயற்கை புல்தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. எழும்பூர் எம்எல்ஏ சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் இந்த மைதானம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் இன்று திறந்து வைத்தார். முதலில் அவர் செயற்கை புல்வெளி கால்பந்து மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பிறகு மைதானத்தின் அருகே கல்வெட்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்த கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார்.
கல்வெட்டை திறந்து வைத்தபோது திமுக எம்எல்ஏ பரந்தாமன் மீது அங்கிருந்தவர்கள் மலர்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது திடீரென்று கூட்டத்தில் பறந்து வந்த கத்தரிக்கோல் பரந்தாமனின் தலையில் பட்டு தெறித்து கீழே விழுந்தது. கத்தரிக்கோல் பட்டதையடுத்து பரந்தாமன் தலையை தொட்டு பார்த்தார்.
அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் அவர் அடையவில்லை. இதற்கிடையே கத்தரிக்கோலை எடுத்த அவரது ஆதரவாளர் யார் கத்தரிக்கோலை வீசினர்? என்று கேள்வி கேட்டார். யாரும் சொல்லவில்லை. இதையடுத்த அந்த சம்பவத்தை அப்படியே விட்டுவிட்டனர். கூட்டத்தில் எம்எல்ஏ பரந்தாமனை நோக்கி அங்கிருந்தவர்கள் மலர்களை தூவியபோது தெரியாமல் கையில் இருந்த கத்தரிக்கோல் அவரை நோக்கி வந்து விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே திமுக எம்எல்ஏ பரந்தாமன் தலையில் கத்தரிக்கோல் வீசப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications