ஆக்சிஜன் தட்டுப்பாடு.. முந்தைய பாதிப்புகளிலிருந்து பாடம் கற்காத மத்திய அரசு.. எஸ்.டி.பி.ஐ. சாடல்..!
சென்னை: கொரோனாவால் கடந்தாண்டு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை என எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. எனினும் நாள்தோறும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருத்துவமனை சிகிச்சைகளில் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்களே இப்போது அதிகரித்து வருகின்றன.''
''டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
ஏற்கனவே கடந்த ஓராண்டாக கொரோனாவால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டும், அந்த பாதிப்புகளிலிருந்து கிடைத்த பாடங்கள் மூலம் போதிய முன்னேற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாததன் விளைவே தற்போதைய ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவர் மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை போன்றவையாகும்.''
''இந்த பற்றாக்குறை காரணமாக வட மாநிலங்களில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக சில நாட்களுக்கு முன்பு நான்கு உயிர்கள் பலியான செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.''
ஸ்டாலினை விடுங்க.. உதயநிதிக்கு "அந்த" பதவியாமே.. வட்டமடிக்கும் கணக்கு.. செம எதிர்பார்ப்பு
''தேவைக்கு அதிகமாக இருக்கும் போது பிற மாநிலங்களுக்கு உதவுவது தான் சிறந்த மனிதாபிமான நடவடிக்கையாகும். அதேவேளையில், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசிடம் அனுமதி கோராமல் பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பது என்பது கண்டிக்கத்தக்கது.''
''கொரோனா பரவல் துவங்கியது முதல் அனைத்து உயிர்காக்கும் மருந்துகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு போதிய உயிர்காக்கும் மருந்துகளை வழங்காமல் பாதிப்பிலும் அரசியல் செய்து வருகின்றது. அதுமட்டுமின்றி மாநில அரசுகளின் கைகளை கட்டிவிட்டு, தொற்றுப் பரவலை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறிவருகின்றது.''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.