தலை, நெஞ்சை குறிவைத்து 13 பேர் மீது துப்பாக்கிச்சூடு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. எஸ்டிபிஐ கோரிக்கை!
சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு மிருகத்தனமானது, விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
காவல்துறையினர் எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிச்சூட்டை ஆரம்பித்து விலை மதிப்பில்லா உயிர்களை சுட்டுக்கொன்றதாக அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த 2018ஆம் ஆண்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. போராட்டம் நூறாவது நாளை எட்டியபோது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

3000 பக்க அறிக்கை
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஸ்னோலின் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், சிலர் கை, கால்களை இழந்து வாழ்நாள் முடமாகினர். காவல்துறையின் அநியாய துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தனது முழுமையான 3000 பக்க விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி வழங்கிய நிலையில் அந்த அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் சொல்வது பொய்
அந்த அறிக்கையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பொதுமக்களின் போராட்டம் தொடர்பாக எவ்வித முன்யோசனையும் இல்லாமல் தவறான முடிவுகளை மேற்கொண்டதோடு, தனது பொறுப்புகளையும் தட்டிக்கழித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிச்சூட்டை ஆரம்பித்து விலை மதிப்பில்லா உயிர்களை சுட்டுக்கொன்றதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை கூறும் கருத்து பொய்யானது என்றும், போராட்டக்காரர்களை தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் குறிவைத்து 13 உயிர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையின் நடவடிக்கை மிருகத்தனமானது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

உயரதிகாரிகளின் சதி
மேலும், ஆணையத்தின் விசாரணையில், போராட்டக்களத்தில் சிலர் ரகசியமாக நுழைந்து நாச வேலையில் ஈடுபட்டதும், அவர்கள் ஸ்டைர்லைட் நிர்வாகம், காவல்துறை பங்களிப்புடன் இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது எனவும் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இதன்மூலம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் முழுக்க முழுக்க ஆலை நிர்வாகம் மற்றும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவான உயர் அதிகாரிகளின் சதியின் பேரிலேயே நிகழ்ந்துள்ளது ஆணையத்தின் அறிக்கை மூலம் தெரிய வருகிறது. ஆகவே தமிழக அரசு ஆலை நிர்வாகம் மீதும், அப்போதைய தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

விரைவாக நடவடிக்கை தேவை
மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தங்களது பொறுப்புகளை தட்டிக்கழித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விசாரணை ஆணையத்தின் பரிந்துரை மீது தமிழக அரசு விரைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கரும்புள்ளி
ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியாக உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு விரைவாக நீதி கிடைக்கப்பெற வேண்டும். சம்பவத்தில் குற்றம் இழைத்த அனைத்து அதிகார வர்க்கங்களும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைப்படியும், உயிரிழந்த தியாகிகளை போற்றும் வகையிலும், நாசகார ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் வகையில் தமிழக அரசு கொள்கை முடிவு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications