துரும்பாய் இளைத்துப் போன விஜயகாந்த்! உட்காருவதற்கே மிகுந்த சிரமம்! கண் கலங்கிய தேமுதிக மகளிரணியினர்!
சென்னை: தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்த விஜயகாந்தை பார்த்து அக்கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் கண் கலங்கி அழுதனர்.
எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரே என மனம் கேட்காமல் கலங்கிய கண்களுடன் பொதுக்குழுவில் மகளிரணியினர் அமர்ந்திருந்தனர். அதேபோல் ரசிகர் மன்ற காலத்திலிருந்து விஜயகாந்துடன் இருக்கும் நிர்வாகிகளும் கண் கலங்கி அழுதுவிட்டனர். அந்தளவுக்கு விஜயகாந்தின் உடல் துரும்பாய் இளைத்து போயிருக்கிறது. கை விரல்கள் எல்லாம் மெலிந்து வளைந்து காணப்பட்டது.

இருக்கையில் விஜயகாந்தால் அமர்ந்திருக்கவே முடியவில்லை. உதவியாளர்கள் இருவர் அவருக்கு பின்னாலேயே நின்று இந்தப் பக்கம் ஒருவர், அந்தப்பக்கம் ஒருவர் என பார்த்துக்கொண்டனர். கேப்டன் நல்லாயிருக்கிறார், அவருக்கும் ஒன்றுமில்லை என தொடர்ந்து பிரஸ்மீட்களில் பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலையை நேரில் கண்டு அவரது அபிமானிகள் துடித்துப் போய்விட்டார்கள்.
தேமுதிக பொதுக்குழு நடைபெற்ற திருமண மண்டப மேடையின் பக்கவாட்டு பகுதி வரை காரில் வந்து இறங்கிய விஜயகாந்த் வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். விஜயகாந்த் வந்த பிறகு பொதுக்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. ஆனால் அவற்றை கூட கவனிக்காமல் தங்கள் தலைவர் விஜயகாந்தை வைத்த கண் வாங்காமல் தேமுதிக பொதுக்குழு உறுப்பினர்கள் பார்த்த வண்ணம் இருந்தனர். தம்ஸ் அப் காட்ட கடுமையாக முயற்சித்தும் விஜயகாந்தால் கையை தூக்க முடியவில்லை.
அதேபோல் உடல் இளைத்திருந்ததால் விஜயகாந்தின் சட்டை மிகவும் லூசாக இருந்தது. இதன் மூலம் என்ன தெரிய வருகிறது என்றால் விஜயகாந்தால் சரியாக சாப்பிட முடியவில்லை என்பதாகும். விஜயகாந்திடம் அவரது அருகில் அமர்ந்திருந்த பார்த்தசாரதி, நிர்வாகிகளை கைகாட்டி ஏதோ அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் விஜயகாந்தால் எந்த ரியாக்ஷனையும் காட்ட முடியவில்லை. இதை காண்போரை கண் கலங்க வைக்கும் நிகழ்வாக இருந்தது.












Click it and Unblock the Notifications