சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனப்படுகொலை நாள்- வீடுகளில் சுடரேற்றி, உப்பில்லா கஞ்சியுடன் உறுதிமொழியேற்போம் – சீமான் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளான இன்று (மே 18) வீடுகளில் சுடரேற்றி, உப்பில்லா கஞ்சியுடன் தமிழ் இன மீட்சிக்கு உறுதி ஏற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்களப்பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடும் ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்களை மொத்தமாகச் சாகக்கொடுத்து 11 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம்.

வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று கி.ரா- கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று கி.ரா- கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி

கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயகத்திற்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எதுவும் கைவரப்பெறவில்லை. விடுதலைக்கான சாத்தியக்கூறுகளைத் துளியும் எட்டியபாடில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழகத் தாயகமும் வலிமையற்று தமிழர்கள் கையிலில்லா தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.

முள்ளிவாய்க்கால் துயரம்

முள்ளிவாய்க்கால் துயரம்

மே-18, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழ நிலம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் மத்தியில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்களப் பேரினவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, 'வீழ்வோம் என்று நினைத்தீரோ?' என்று கேள்வி எழுப்பி, 'விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!' எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.

வீடுகளில் சுடரேற்றுங்கள்

வீடுகளில் சுடரேற்றுங்கள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம். கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், இனப்படுகொலை நாளை நினைவுகூற தமிழர்கள் யாவரும் தத்தம் வீடுகளிலேயே நினைவேந்தலை முன்னெடுக்க வேண்டுமென உள்ளன்போடு அழைக்கிறேன். இன்று மே-18 மாலை சரியாக 6:10 மணியளவில் உறவுகள் அவரவர் வீடுகளில் எழுச்சிச் சுடரேற்றி, இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க வேண்டுமென உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்.

உப்பில்லா கஞ்சியுடன்...

உப்பில்லா கஞ்சியுடன்...

ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லல்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த அக்காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உப்பில்லா கஞ்சியைக் காய்ச்சி அதனை உண்டு, மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன விடுதலைக்களத்தில் நமது உறவுகள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட இல்லங்களிலே இருந்தவண்ணம் உலகம் முழுமைக்கும் பரப்புரை செய்திடுவோம்.

உறுதி ஏற்போம்

உறுதி ஏற்போம்

உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்! இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar Chief Seeman calls to obeserve the Mullivaikal massacre day and lighting the lamps today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X