இத்தனை உயிர்களுக்கு உலை வைக்க காரணமே மோடி அரசின் அலட்சியம்தான்.. சீமான் கடும் கண்டனம்
காஷ்மீர் தாக்குதலுக்கு சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: தேர்தல் நேரத்தில் நடைபெற்றுள்ள தாக்குதல் பல யூகங்களையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளதாகவும், இத்தனை உயிர்களுக்கு உலை வைக்க காரணமே மோடி அரசின் அலட்சியம்தான் என்றும் சீமான்" தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 44 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொடூரத் தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அதில் தமிழர்கள் இருவர் என்பதையறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.
350 கிலோ எடைகொண்ட வெடிகுண்டோடு இராணுவத்தினர் மத்தியில் ஊடுருவி அவர்களைத் தாக்கி அழிக்கிற அளவுக்குத்தான் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு இருக்கிறது என்கிற போதே நாட்டையாளும் மோடி அரசின் அலட்சியமும், நிர்வாகச் சீர்கேடுமே இத்தனை உயிர்களுக்கு உலை வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.
தேர்தல் நெருக்கத்தில் நிகழ்ந்திருக்கிற இக்கோரச் சம்பவமானது பல்வேறு யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது. இனியேனும் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாமலிருக்க மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications