வா ஒத்தைக்கு ஒத்தை என உதார்.. போதுமா சீமான்? இளைஞர்களை சீரழித்தது தான் மிச்சம்.. விளாசிய ராஜீவ்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து சீமானை விமர்சித்துள்ளார் ராஜீவ் காந்தி.
சென்னை : "ஒத்தைக்கு ஒத்தை வா என்று உதார் விடுவது! ஓரே அடியில் 50 பேரை அடிப்பேன் என வீரவசனம் பேசுவது! செருப்பினை தூக்கி காட்டுவது! மேடையில் கெட்ட வார்த்தை பேசுவது! என அரசியலில் தவறான முன்னுதாரணம் சீமான்" என கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜீவ்காந்தி, சீமானின் அநாகரிக மேடை உதார் பல இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்தது தான் மிச்சம் எனக் கூறியுள்ளார்.

வார்த்தையை விட்ட சீமான்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட திருநகர் காலனி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அருந்ததியினர் மக்கள் தூய்மைப் பணி செய்ய வந்தவர்கள், வந்தேறிகள் என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமான் பேசியதைக் கண்டித்து ஈரோடு கிழக்கு தொகுதி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அருந்ததியர் சமுதாய மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்குப்பதிவு
அருந்ததியர் மக்கள் சார்பில் சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கட்சியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மண்டை உடைந்தது
இந்நிலையில், வீரப்பன்சத்திரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக நேற்று சீமான் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலருக்கு மண்டை உடைந்தது. துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீரழித்தது தான் மிச்சம்
இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, "வா ஒத்தைக்கு ஒத்தை என்று உதார் விடுவது! ஓரே அடியில் 50 பேரை அடிப்பேன் என வீர வசனம் பேசுவது! செருப்பினை தூக்கி காட்டுவது! மேடையில் கெட்ட வார்த்தை பேசுவது! என அரசியலில் தவறான முன்னுதாரணம் சீமான்! இந்த அநாகரிக மேடை உதார் பல இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்தது தான் மிச்சம்" எனத் தெரிவித்துள்ளார்.

போதுமா சீமான்?
மேலும், நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசும்போது, "சீமான் வரலாற்றில் உள்ள ஒரு தகவலைச் சொன்னதற்கு அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமாம்.. திராவிட அற்பத்தனமானவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.. நாங்கள் நினைத்தால் ஸ்டாலினையே எரிப்போம்" எனப் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராஜீவ் காந்தி, "போதுமா சீமான்? சீமான் பேசுவது அரசியல் அல்ல!" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications