“ஜஸ்ட் 2 நிமிஷம்தான்.. போராட்டம் முடிஞ்சுபோச்சு!” ஆசிரியர்கள் மத்தியில் காமராஜர் கதையை சொன்ன சீமான்
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், போராட்ட களத்தில் ஆசியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்த கதையை சீமான் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை போக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட மறுத்தார்கள். இதனையடுத்து இன்று அதிகாலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆசிரியர்கள் மத்தியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து பேசியிருந்தது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. ஆசிரியர் மத்தியில் அமர்ந்திருந்த சீமான் பேசியதாவது,
"சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் பக்கத்தில் ஒரு முறை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் பேருந்து நடத்துநரை தாக்கியுள்ளனர். நடத்துநர் தரப்பிலும் வாக்குவாதம் எழுந்த நிலையில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். சாலை முழுவதுமாக மறிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரிக்கு செல்ல மாட்டோம் என மாணவர்கள் போராட்டத்தில் தீவிரமாக இருக்கின்றனர். அந்த சமயம் முதலமைச்சராக இருந்தவர் காமராஜர் ஐயாதான்.
இந்த போராட்டத்தை கேள்விப்பட்டவுடன் உடனடியாக வண்டியை எடு போகலாம் என்று கூறி போராட்டம் நடந்த பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறார் அவர். போராட்டம் நடக்கும் இடத்திற்கு எந்த தலைவரும் வர மாட்டார்கள். ஆனால் காமராஜர் ஐயா வந்திருந்தார். மட்டுமல்லாது போராட்டக்காரர்களிடம் என்ன பிரச்சனை என்று சம்பவ இடத்திலேயே விசாரித்திருக்கிறார். மாணவர்கள் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்கள். நடத்துநரும் தனது தரப்பு நியாயத்தை விளக்கியிருக்கிறார். ஆனால் மாணவர்கள் போராட்டத்தில் தீவிரமாக இருப்பதால், என்ன செய்ய வேண்டும்? என்று அவர்களிடம் காமராஜர் கேட்டிருக்கிறார்.
மாணவர்கள் ஒரே குரலாக நடத்துநரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளார்கள். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பேருந்து நடத்துநரை சம்பவ இடத்திலேயே முதலமைச்சர் டிஸ்மிஸ் செய்து விட்டார். அதேபோல மாணவர்களை கல்லூரிக்கும் அனுப்பி வைத்துவிட்டார். அவ்வளவுதான் ஜஸ்ட் 2 நிமிஷத்துல போராட்டம் முடிஞ்சு போச்சு. இதனையடுத்து காரில் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம், 'என் உடனடியாக நடத்துநரை டிஸ்மிஸ் செய்தீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு காமராஜர், 'படிக்கும் மாணவர்களிடம் ஏன் நடத்துநர் சண்டையிட வேண்டும்?' என்று பதில் கேள்வி எழுப்பிய அவர், பதிலுக்காக காத்திராமல் 'டிஸ்மிஸ் செய்யப்பட்ட நடத்துநரை இரண்டு நாட்கள் கழித்து அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்க சொல். இந்த இடம் இல்லாத வேறொரு பகுதிக்கு அவரை பணி மாறுதல் செய்கிறேன்' என்று கூறியிருக்கிறார்" இப்படியாக கதையை சொல்லி முடித்த சீமான், "இதுவரை ஒரு தலைவன் கூட போராட்ட களத்திற்கு வந்ததில்லை" என்று பேசியுள்ளார். இந்த கதை தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications