சீமான் இன்று அரசியல் செய்யவே பெரியார்தான் தேவைப்படுகிறார்.. பட்டுனு சொன்ன பார்த்திபன்!
சென்னை: சீமான் இன்று அரசியல் செய்யவும் தந்தை பெரியார் தான் தேவைப்படுகிறார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று நடிகர் பார்த்திபன், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு நடிகர் பார்த்திபன் பதில் அளித்துள்ளார்.

பார்த்திபன் கூறுகையில், "நண்பர் சீமான் இயக்குநர் என்பதை எல்லாம் மீறி மிகப்பெரிய அரசியல்வாதி ஆகிவிட்டார். அரசியலில் அவரது பார்வைக்கு வேறு நோக்கம் இருக்கலாம். பெரியாரை ஏன் கொஞ்சம் சிறியார் ஆக்கவேண்டும் என்பதற்கு அவருக்கு சில காரணங்கள் இருக்கலாம்.
இதில் நாம் சாம்பிராணி போட்டு போட்டு புகைச்சலை அதிகமாக்குவ்தை விட்டுவிட்டு அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். இன்றைக்கு, சீமான் அரசியல் செய்வதற்கும் பெரியார் தேவைப்படுகிறார் என்றால், அவர் அவ்வளவு பெரியார்" எனத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார். பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சீமான் வீடு அண்மையில் பெரியாரிய ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டது. ஆனாலும், சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
அண்மையில் கூட, "பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி, தமிழில் ஆங்கிலம் கலந்து பேசவேண்டும் என்று கூறியவர். இந்தி எதிர்ப்பு போரில் தமிழர்கள் தீக்குளித்த போது கொலைகாரர்களாக பார்த்தவர் பெரியார்தான். இந்திக்கு எதிராக போராடுகிற கருங்காலிகளை பெட்ரோல், டீசல் கொண்டு கொழுத்துங்க, வெட்டுங்க என்று சொன்னவர்தான் பெரியார்.
திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.. இதனை பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொன்னால் கொலை வெறி ஆகிவிடும். இது சேர சோழ பாண்டியர் மண்.. பூலித்தேவர் மண்.. வேலுநாச்சியார் மண்.. முத்துராமலிங்க தேவர் மண். காமராஜர் மண். இது என் மண்.. தமிழ் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications