வாக்களிக்காமல் இருப்பதும் தேச விரோத குற்றமே.. 1 வாக்கால் என்ன மாறப்போகுதுனு நினைக்காதீங்க.. சீமான்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதும் தேச விரோத குற்றம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் வாக்களித்த சீமான், ஒவ்வொரு வாக்கும் மாற்றத்திற்கானது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6 மணி முதலே ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருந்தனர்.

கோடை வெப்பம் காரணமாக காலையிலேயே வாக்களிக்க ஏராளமானோர் வாக்குச்சாவடிகளில் குவிந்து வருகின்றனர். இந்த சட்டசபைத் தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவியுடன் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். இதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜனநாயகத்தின் கடைசி ஆயுதம் வாக்கு. வருமான வரி ஏய்ப்பு, கொலை, திருட்டு, தீவிரவாதம் உள்ளிட்டவை மட்டுமல்ல.. வாக்களிக்காமல் இருப்பதும் தேச விரோத குற்றம்தான்.
கற்றவர்கள் அனைவரும் மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். சிலர் நமது ஒரு வாக்கால் என்ன நடக்க போகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு வாக்கில் இருந்தும் தான் மாற்றம் வரும். அதனை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது நிர்வாக சீர்கேடு. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க தமிழ்நாடு வரும் பலரின் முடிவை வரவேற்கிறேன். காவலர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு எப்படி தபால் வாக்கு அளிக்கும் வசதி அளிக்கப்படுகிறதோ, அதுபோல் வெளிநாடுகளில் இருக்கும் அனைவருக்கும் தபால் வாக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications