சிறையா? இது தான் தமிழை வளர்க்கும் முறையா? தம்பிகளை தட்டித் தூக்கிய போலீஸ்.. சீற்றம் கொண்ட சீமான்!
சென்னை: தமிழில் பெயர்ப்பலகை வைக்கப் போராடினால் சிறையா? இதுதான் தமிழ்நாடு அரசு தாய்த்தமிழை வளர்க்கும் முறையா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழில் பெயர்ப்பலகை வைப்பதை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," காஞ்சிபுரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்ற தமிழ்ப்பெயர்ப்பலகை பரப்புரை இயக்கத்தைச் சேர்ந்த தம்பிகள் தமிழ் முகிலன், தமிழ் மணி, மேகநாதன், சங்கர் உள்ளிட்டவர்களை திமுக அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போர் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிட ஆட்சியாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும். 'மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை' எனப் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் வருந்திப்பாடி, 70 ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் வீதிகளில் பெயர்ப்பலகைகூடத் தமிழில் இல்லாதிருப்பது எந்தவொரு இன மக்களுக்கும் நிகழ்ந்திடக்கூடாப் பெருங்கொடுமையாகும்.
அரசு அலுவலகங்களில் 'தமிழ் வாழ்க' என்று எழுதியதைத் தவிர, திமுக அரசு அன்னை தமிழின் வளர்ச்சிக்குச் செய்த நன்மை என்ன? தமிழ் வாழ்க என்று அரசு நிறுவனத்தில் எழுதி வைத்துவிட்டு தனியார் நிறுவனங்களை தமிழில் பெயர் வைக்கக்கோரி போராட்டம் நடத்துவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் தமிழை வளர்க்கும் முறையா?
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெற செய்ய வேண்டுமென கடந்த 08.02.24 அன்று வணிகர்களிடம் வலியுறுத்திய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை ஏன் கைது செய்யவில்லை? அதே கருத்தை, கடந்த 23.07.24 அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 'தமிழ்த்தெருவில் தமிழ் இல்லையென்று இனி யாரும் குறைகூற முடியாத நிலையை உருவாக்க வேண்டும்' என்று கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களை ஏன் கைது செய்யவில்லை? அமைச்சர் பேசினால் சட்டம்? அடுத்தவர் பேசினால் குற்றமா? முதலமைச்சரின் குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனங்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், குடிநீர் நிறுவனம் உள்ளிட்ட எந்த வணிக நிறுவனத்தின் பெயராவது தமிழில் உள்ளதா? இதுதான் எந்தக் கொம்பனும் குறைகூற முடியாத ஆட்சியா?
தொடர்ச்சியாக 60 ஆண்டிற்கும் மேலாக திராவிடக் கட்சிகள் தமிழர் நிலத்தை ஆண்ட பிறகும் தமிழ்நாட்டுத் தெருக்களில் பெயர்ப்பலகைகள் கூட தமிழில் இல்லை என்பதைவிட வேறென்ன கேவலம் இருக்க முடியும்? கர்நாடக மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் கன்னட மொழியிலேயே பெயர்ப்பலகை வைக்க வேண்டுமென அம்மாநில அரசு தனிச்சட்டம் இயற்றி அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டுமென்ற ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி போராடுபவர்களை தமிழ்நாடு அரசே கைது செய்து சிறைப்படுத்துவதை விடக் கொடுமை என்ன இருக்க முடியும்?
ஆகவே, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்திப் போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள தம்பிகள் தமிழ் முகிலன், தமிழ் மணி, மேகநாதன், சங்கர் உள்ளிட்டவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டில் செயல்படும் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சின்னஞ்சிறு கடைகள் வரை அனைத்திலும் அன்னைத் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications