கடைசியில் ரஜினியிடம் "ஸாரி" கேட்ட சீமான்.. பொறுமையால் வென்ற ரஜினி.. சபாஷ்.. இதுதான் நமக்கு தேவை!
சீமானின் அறிக்கை இன்று பெரிதும் ஈர்க்கும்படி உள்ளது
சென்னை: சீமான் இன்று பேசிய கருத்தக்கள் அனைத்தும் தமிழக அரசியலில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது... ஈர்த்தும் வருகிறது.
ரஜினி என்றாலே டென்ஷன் ஆகிவிடுவார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.. ரஜினியின் அரசியல் வருகையை இந்த 3, 4 வருடத்தில் மிக கடுமையாக எதிர்த்தவர் சீமானாகத்தான் இருக்க முடியும்.
அப்படிப்பட்ட சீமான் இன்று ஒரு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அரசியல் ரீதியாக வரும்போது ஐயா ரஜினிகாந்த் மீது கடும்விமர்சனங்களை கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம்... அது அவரையோ அவரது குடும்பத்தினரையோ ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் நான் பெரிதும் வருந்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அரசியல்
இந்த குணம் அரசியலில் வரவேற்கதகுந்தது.. அரசியல் பிரச்சாரங்களில் தனிப்பட்ட முறையிலேயே தாறுமாறாக ஒருவருக்கொருவர் திட்டி கொள்வது நடந்து வருகிறது.. அதிலும் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த காலகட்டத்தில், வயது, அனுபவம், அறிவு, எதையுமே கணக்கில் கொள்ளாமல், நேற்று வந்தவர்கள் எல்லாம் மூத்த தலைவர்களை நாகரீகமே இல்லாமல் விமர்சித்து பேசுவதையும் சமீப காலமாக கேட்க முடிகிறது.

நாகரீகம்
ஆனால், இதில் எல்லை மீறாமல் இருந்து, கண்ணியத்துடன் விமர்சித்து கொண்டது முக ஸ்டாலினும் - தமிழரசி சவுந்தராஜனும் என்பதை மறக்காமல் சொல்ல வேண்டும்.. அதுபோலவேதான் சீமானும் பேசியிருக்கிறார்.. அவரது ஒவ்வொரு பேச்சிலும் ரஜினியை எதிர்த்து பேசியது சோஷியல் மீடியாக்களில் பெரும் வைரலானது.. இப்போதும் அந்த வீடியோக்கள் யூடியூப்பில் உள்ளன. எனினும், அரசியல் ரீதியான விமர்சனமே என்றாலும், அதற்கும் தற்போது சீமான் மன்னிப்பு கேட்டுள்ளது பாராட்டத்தக்கது.. இதுவரை இப்படி யாரேனும் செய்திருக்கிறார்களா என்றும் தெரியவில்லை.

முரண்பாடு
ஏற்கனவே ஒருமுறை சீமான் பேசும்போது, தன் தம்பிகளை எச்சரித்திருந்தார்.. "ரஜினிகாந்த்துடன் நாம் முரண்படறோம் என்றால் அது அரசியலோட சரி.. அவரோட கருத்தோட மட்டும்தான்... மற்றபடி ரஜினிகாந்த் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு.. அவர் படங்களை ரசிப்பேன்... ஆனால், அவர் மண்ணில், மராட்டியத்தில், கர்நாடகத்தில் போய் கட்சி ஆரம்பித்தால், அவரை வாழ்த்தி நான் போய் பேசுவேன். அப்படி வாழ்த்தும்போது என்னை மாதிரி யாரும் பேச முடியாது. ஆனால், என் நிலத்தில் மானத்தமிழ் மண்ணை ஆள மராட்டியர் நினைப்பது மிகப்பெரிய தவறு" என்று கூறியிருந்தார்.

கடின வார்த்தை
அதேபோல ரஜினியும் சரி, சீமான் எவ்வளவு விமர்சித்தாலும் இதுவரை ஒருவார்த்தைகூட அவரை கடிந்து பேசியதே கிடையாது.. மறைமுகமாககூட சீமானுக்கு எதிராக பேசியதே கிடையாது.. 2 மாசத்துக்கு முன்னாடிகூட, சீமானுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. வடபழனியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பிய நிலையில், சீமானுக்கு ரஜினி போன் செய்து, உடல்நலம் குறித்து விசாரித்தார்.

சபாஷ்
வழக்கமாகவே ரஜினி எல்லாருடைய உடல்நலனிலும் அக்கறை காட்டுபவர்.... சீமானிடம் உடம்பை நன்றாக கவனித்து கொள்ளுமாறு அப்போது அறிவுறுத்தி இருந்தார்.. இதுதான் ரஜினியின் குணம்... ஒருவேளை ரஜினி கடைசி வரை திட்டாததும், விமர்சிக்காததும்கூட, சீமானுக்கு உருத்தலாக போய்விட்டதோ என்னமோ? எப்படி பார்த்தாலும் ரஜினியின் மென்மை போக்கும், அதை வழிமொழிந்து வருத்தம் தெரிவித்துள்ள சீமானின் போக்கும் இன்றைய தமிழக அரசியலின் நாகரீகத்துக்கு அடித்தளமாக அமையும் என்றே நம்பலாம்!












Click it and Unblock the Notifications