என் நிலை யாருக்குமே வரக் கூடாது- நடிகை விவகாரத்தில் சீமான் திடீர் உருக்கம்
சென்னை: என்னை விமர்சிக்க திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தகுதியில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: என்னை விமர்சிக்க திமுக, திகவுக்கு தகுதியில்லை.
பாலியல் வழக்கில் என்னை விசாரிக்க உச்சநீதிமன்றம் விதித்த தடையை வரவேற்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட நிலை, இந்தியாவில் வேறு யாருக்கும் வரக் கூடாது. எனக்கு எதிரான வழக்கு நிற்காது. என் மகன் தற்போது 10ஆம் வகுப்புக்கு வந்துவிட்டான். அவனுக்கு என்னை பற்றி தெரியும். ஆனால் அவன் நண்பர்கள் இந்த விஷயத்தை பேசும் போது சங்கடப்படுவான். அதற்காகத்தான் இந்த வழக்கை முடித்து வைக்க வழக்கு போட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி: திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட சீமான், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஒருவர், 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு அந்த நடிகை முதல் மனைவியா என கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் சீமான் மீதான வழக்கை விசாரித்து 12 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த வளசரவாக்கம் போலீஸார் இரு முறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஒரு வழியாக கடந்த பிப். 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஆஜராகினார். அப்போது அவரிடம் 63 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே சீமானிடம் 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகை இதுவரை 3 முறை வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
ஆட்சி மாற்றம் நடைபெறும் போதெல்லாம் அந்த நடிகையின் வழக்கை கையில் எடுக்க வைக்கிறார்கள். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அது போல் நடிகை தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நீதிபதிகள், இரு தரப்பும் சமரசம் பேச உத்தரவிட்டு, எதிர்தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு வழக்கானது ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே பாலியல் குற்றவாளி சீமானை கைது செய் என சென்னையில் திராவிடர் கழக அமைப்பு போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது போல் நடிகையை சீமான் அவதூறாக பேசி வருவதை பெண் தலைவர்கள் கண்டித்துள்ளனர். அவர்களும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications