சிலர் சாமியை காக்க போராடுகிறார்கள்.. நாம் பூமியை காக்க போராடுகிறோம்.. சீமான் நறுக் பேச்சு
சென்னை: சாதிக்கு ரத்தவெறி இருக்கிறது. ஆனால் ரத்தத்திற்கு சாதிவெறி இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
முந்திரிக்காடு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் கோபமாக பேச வேண்டும் என பேசவில்லை.
நான் ஒரு அப்பாவி. பல ஆண்டுகள் இருந்த வலி அது ஆவேசமாக மொழியாக வருகிறது. நல்ல விஷயம் நடந்தால் திராவிடன், பெரியாரியன் என்று பேசுவதும், தலைக்குனியும் பிரச்சினை வரும் போது மட்டும் தமிழன் தலை குனிய வேண்டும் என சொல்லுவது நாக்கை திருத்த முடியாத தமிழன் எப்படி நாட்டை திருத்துவான்.
எழுச்சி
இழிவு என்று எது சொல்லப்படுகிறதோ அதை எழுச்சியாக மாற்ற வேண்டும். உலகத்தில் இருப்பவன் தாய்மொழியில் பெயர் வைத்தான். ஆனால் தமிழன் தாய்மொழியையே பெயராக வைத்தான்.
ரத்தத்திற்கு சாதி
முன்னேறிய ஜாதி பிரிவினருக்கு எதற்கு இடஒதுக்கீடு. அதுதான் முன்னேறிவிட்டாரே எதற்கு இடஒதுக்கீடு என்று கேட்டால் பதில் இல்லை. சாதிக்கு ஏது முன்னேற்றம். சாதிக்கு ரத்த வெறி இருக்கு. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை.
தோண்டுதல்
கிமு, 300 ஆண்டுதான் தமிழ் தொன்மையானது என பாடப்புத்தகத்தில் போட்டுள்ளனர். கீழடியை தோண்டுங்கள் எத்தனை பழமையானது என தெரியும். எதையெல்லாம் தோண்ட சொல்கிறோமோ அதை தோண்டமாட்டார்கள். எதையெல்லாம் மூட சொல்கிறோமோ அதையெல்லாம் தோண்டுவார்கள்.
பூமி
உதாரணத்துக்கு ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகும். சிலர் சாமியை காப்பாற்ற போராடுகிறார்கள். நாங்கள் பூமியை காப்பாற்ற போராடுகிறோம் என சீமான் கூறினார்.