வந்தா வெட்டுவோம்! உருட்டுக் கட்டையோடு ரவுடித் தனம் செய்யும் நாம் தமிழர் கட்சியினர்
சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அவரது வீட்டு முன் குவிந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சீமான் வீட்டை முற்றுகையிட 'வந்தால் வெட்டுவோம்' என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க சீமான் வீட்டு முன் அமர்ந்து நாம் தமிழர் தம்பிகள் சிலர் சீரியஸாக கரும்பையும் சுவைத்துக் கொண்டிருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என பேசி, அவர் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்," அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகி விடுமா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர்.
நமக்கு என்று யாரைக் குறிக்கிறீர்கள்? சமதர்மம், சமத்துவம்தானே உங்கள் கோட்பாடு? நமக்குக் கீழானவர்கள் எதிரி என்றால் அவர்கள் எந்த இனம்? இதைவிடக் கொடிய தீண்டாமை சிந்தனை உண்டா? திமுகதான் பாதுகாப்பு எனக் கூறும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை எதிரிகள் எனக் கூறுவதை எப்படி ஏற்கிறீர்கள்? துளுக்கர்களுக்குக் கொடுக்கும் இடஒதுக்கீடு சாணியில் கால் வைப்பதற்குப் பதிலாக மலத்தில் கால் வைப்பதற்குச் சமம் எனக் கூறியதற்குச் சான்று கேட்கவில்லையே?" என பேசியிருந்தார்.
சீமான் மேலும் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
சீமானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், திமுக எம்பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்ளிட்ட பலரும் சீமானுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீமானின் வீடு இன்று முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இதை அடுத்து சீமான் வீடு உள்ள நீலாங்கரை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சீமானின் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இது ஒரு புறம் இருக்க சீமான் வீட்டு முன் நாம் தமிழர் கட்சியினர் மகளிர் அணியினர் கையில் உருட்டு கட்டைகளுடன் திரண்டனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை முற்றுகையிட வந்தால் வெட்டுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர் நாம் தமிழர் தம்பிகள். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஒருபுறம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கோபத்துடன் சவால் விட்டுக் கொண்டிருக்க மறுபுறம் சுடச்சுட பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது. மற்றொரு புறமோ நாம் தமிழர் கட்சி தம்பிகள் மிகவும் சீரியஸாக அமர்ந்து கரும்பை சுவைத்துக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications