Seeman: புதிய அரசு அமைக்கும் தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள்! தேர்தல் முடிவு பற்றி சீமான் ரியாக்ஷன்
சென்னை: "தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக புதிய அரசுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய், ஆட்சி அமைக்க ஆயத்தமாகி வருகிறார். 108 இடங்களை வென்ற விஜய்க்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அரசியல் களத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்த சீமானும், விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.

விஜய்க்கு சீமான் வாழ்த்து
சீமான் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளவுப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்" என்று பதிவிட்டுள்ளார்.
பாதியாக குறைந்த வாக்கு சதவீதம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் டெபாசிட் இழந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி அங்கீகாரத்தையும் பெற்று இருந்த நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வாக்குகளையும் 4 சதவீதம் அளவுக்கு தமிழக வெற்றிக் கழகம் பிரித்து இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
234 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது
2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான் 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவில்லை. 2016-ம் ஆண்டு தேர்தலில் அந்த கட்சி முதல் முறையாக போட்டியிட்டது. அப்போது 1.7 சதவீத வாக்குகளை பெற்றது. பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 6.58 சதவீதமாக உயர்ந்து இருந்தது.
கடந்த லோக்சபா தேர்தலில் இது 8 சதவீதத்தை தாண்டிய நிலையில் சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 35 லட்சம் வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி தற்போது 19,72,537 வாக்குகளை பெற்றுள்ளது. போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் சில தொகுதிகளில் விஜய்யின் வெற்றி வாய்ப்பை பறித்ததாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்கள் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் அதில் சீமானின் வேட்பாளர்கள் அதைவிட கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.















Click it and Unblock the Notifications